கண்ணதாசன் பாடல் வரிகள் எல்லாமே காலத்தினை வென்றவை. எந்த சூழலுக்கும் ஏற்ற மாதிரி ஒரு பாடலாவது எழுதியிருப்பார் அந்த கவிதைச் சுரங்கம். அப்படி அவர் எழுதிய பாடல் வரிகள் தான்..


பணமிருக்கும் மனிதரிடம்
மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம்
பணம் இருப்பதில்லை..


அந்தப் பாடலுக்குப் பொருத்தமான புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. ஒரு வீடற்றவர் தன் படுக்கை விரிப்பில் சில நாய்களுக்கு இடம் கொடுத்து தானும் உறங்கும் படம் அது. 


அவர் கையில் பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனதில் தாராளமாக இடம் இருக்கிறது. அதனால் தான் தெரு நாய்களுக்கும் அவர் தன் படுக்கையில் இடம் கொடுத்திருக்கிறார்.


இந்தப் புகைப்படத்தை  IFS அதிகாரியான  சுசாந்த நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த உலகம் முழுமையையும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு நம் இதயம் விசாலமானதாக இருக்க வேண்டும் என்று எழுதியுள்ளார். அவரது வார்த்தைகளுக்காகவும், நாய்களுக்கு இடம் கொடுத்த நபரின் மனதிற்காகவுமே அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.






சுசாந்தாவை நினைவிருக்கிறதா?


ஒரு வழிதவறிய யானைக் குட்டியை அதன் கூட்டத்தில் சேர்த்து வைத்துள்ளது வனத்துறை. அப்போது அந்த தாய் யானை வனத்துறை ஊழியர்களைப் பார்த்து நன்றி சொல்வதுபோல் தனது தும்பிக்கையை உயர்த்திக் காட்டுகிறது. சுசாந்த நந்தா என்ற இந்திய வனத் துறை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் கீழ் வீடியோவுக்காக தமிழக வனத்துறைக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.


அதைப் பகிந்த அவர், “அந்த ஆசீர்வாதம்... குட்டியை தாய் யானையுடன் வனத் துறை அதிகாரிகள் இணைத்து வைத்தனர். அந்த தாய் யானை அதன் சொர்க்கபுரிக்குச் செல்லும் முன் அழகாக வாழ்த்திச் செல்கிறது. எத்தனை அழகு. தவறுவிடக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார். தமிழக வனத்துறை அதிகாரிகளுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.






சுசாந்த நந்தா இதுபோன்று பல்வேறு வீடியோக்களை பகிர்ந்திருப்பார். அதுவும் குறிப்பாக அண்மையில் அவர் நீலகிரியில் யானை ஒன்று பிளாஸ்டிக் பையை எடுத்து உண்ணும் வீடியோ மிகுந்த கவனம் பெற்றது. அந்த வீடியோவில் சுசாந்த தாஸ் வன உயிர்களைப் பாதுகாக்க மக்கள் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும் என்று கோரியிருப்பார்.