திருமணமாகாதவர்கள் இதய நோயால் உயிர்ழப்பதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. யூரோப்பியன் சொசைட்டி ஆஃப் கார்டியாலஜி மேற்கொண்டுள்ள ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது. 


இந்த ஆய்வறிக்கையை எழுதிய டாக்டர் ஃபேபியன் கேர்வேகன், நீண்ட கால நோய் தாக்கங்களில் இருப்போரின் உடல்நலத்தைப் பேண சமூக ஆதரவு அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.


வாழ்க்கைத் துணையாக இருப்பவர் பாதிக்கப்பட்ட நபரின் மருந்துப் பழக்கவழக்கத்தை சீராக வைத்திருத்தல். வாழ்க்கை முறையைஅ சீராக வைத்துக் கொள்ளுதல் ஆகியனவற்றில் உதவுவர். அதனால் வாழும்காலம் நீட்டிக்கப்படும். ஆனால் அதே வேளையில் இதயநோய் உள்ள திருமணமாகாதவர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்கப்போவதில்லை. அதனால் அவர்கள் நோயால் சீக்கிரம் உயிரிழக்க அதிக வாய்ப்புள்ளது.


இந்த ஆய்வில் 1022 நோயாளிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் 2004 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களாவர். இவர்களில் 63% பேர் அதாவது 633 பேர் திருமணமானவர்கள், 375 பேர் அதாவது 37% பேர் திருமணமாகதவர்கள். 195 பேர் துணையை இழந்தவர்கள். 84 பேர் விவாகரத்தானவர்கள்.


வாழ்க்கைத் தரம், சமூக நிர்பந்தங்கள், சுய செயல்திறன் ஆகியனவற்றின் கீழ் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக பிரத்யேகமாக ஒரு கேள்வி பதில் படிவம் தயார் செய்யப்பட்டது.




ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்தவரை திருமணமானவர்கள் ஆகாதவர்கள் என இருதரப்பினரிடம் இருந்தும் ஒரே மாதிரியான பதில்கள் வந்தன. ஆனால், சுய செயல்திறன் பொறுத்தவரையில் திருமணமாகாதவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகக் காட்டினர்.


10 ஆண்டுகள் வரை இவர்களின் நலன் ஆய்வு செய்யப்படது. இதில் 679 நோயாளிகள் இறந்தனர். இவர்களில் திருமணமாகாதவர்களே அதிகம். அதுவும் வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் மிக அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். திருமணத்துக்கும் இதய நோய்க்கும் என்ன தொடர்பு என்பதையும் டாக்டர் கேர்வாகன் விளக்கியுள்ளார். அதில் அவர், திருமணமான நபர்களுக்கு சமூக ஆதரவு கிடைக்கிறது. ஆகையால் இதய நோய் சிகிச்சை அளிக்கும் நிபுணர்கள் நோயாளிகளின் திருமண நிலையை கேட்டறிய வேண்டும். ஒருவேளை அவர்கள் தனித்திருப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு சமூக உறவில் இருக்கும் இடைவெளியைக் குறைக்கும் அளவுக்கு பரிந்துரைகள் வழங்க வேண்டும். இதயநோய் உள்ளவர்களை அன்றாடம் கண்காணிக்க, உறுதுணையாக இருக்க பிரத்யேக செயலிகளை உருவாக்கி அதை அவர்கள் பயன்படுத்துமாறு செய்வதும் கூட அவர்களை சமூக ரீதியாக உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, இதய நோய் கொண்ட திருமணமாகாதவர்களே சீக்கிரம் உயிரிழக்க அதிக வாய்ப்பிருக்கிறது. திருமண பந்தமோ, இல்லை துணையோ நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள நல்ல வழிவகை செய்கிறது என்பதே ஆய்வறிக்கையின் முடிவாக உள்ளது.