உலகம் முழுவதும் 168 கலாச்சாரங்களை ஆய்வு செய்ததில் அவர்களுள் பாதிக்கும் மேற்பட்ட கலாச்சாரங்களில் உதட்டில் முத்தமிடும் வழக்கம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியல் பேராசிரியர் வில்லியம் ஜான்கோவியக் காதல் என்ற அடிப்படையில் வெறும் 46 சதவிகிதம் பேர் மட்டுமே உதட்டோடு முத்தம் வழங்குவதாகக் கூறியுள்ளார். 


மனிதர்களுக்கு முத்தம் ஏன் முக்கியம் என்பது தொடர்பான தத்துவங்களில் மனிதர்கள் குழந்தைகளாக இருந்த போது இருந்து உதடு மூலம் மேற்கொள்ளும் தொடுதல்கள் நெருக்கமானதாகக் கருதப்படுகின்றன. குழந்தைகளுக்குப் பாலூட்டுவதில் இந்த உணர்வு அனைவரிடமும் ஒருசேர இருக்கிறது. மேலும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மூதாதையர்களில் தாய்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவை மென்று, வாய் மூலம் வழங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கம் சிம்பான்சி வகைக் குரங்குகளிடம் காணப்படுவதால் இவ்வாறு கருதப்படுகிறது. 



முத்தம் குறித்த ஆய்வுகளில் ஆடையே முத்தம் என்ற அம்சம் தோன்றியதற்கான காரணம் எனவும் ஒரு தத்துவம் நிலவுகிறது. `மனிதர்களிடையே இதழ் முத்தம் தோன்றியதற்கான அடிப்படை காரணமே உடைகள் தான் என்று கருதுகிறேன். ஏனெனில் உடைகள் இல்லாமல் இருந்திருந்தால் முத்தத்தைத் தவிர மனிதர்கள் தம் பிரியத்தை வேறு விதங்களில் வெளிப்படுத்தியிருக்கலாம்’ எனக் கூறுகிறார் பேராசிரியர் வில்லியம் ஜான்கோவியக். 


இதழ் முத்தத்தைப் பின்பற்றாத கலாச்சரங்களில் வெவ்வேறு வகையில் தங்கள் இணையோடு சேரும் பண்புகள் இருப்பதாக எழுத்தாளர் ஷெரில் கிர்ஷென்பாவ்ம் தெரிவித்துள்ளார். `மலேசியாவில் பழங்குடியினரில் பெண்கள்  அமர்ந்திருக்கும் நிலையில், ஆண்கள் அவர்கள் மீது தொங்குவது போல நின்று, அவர்களது வாசனையை நுகர்வர் என்பதை சார்லஸ் டார்வின் பதிவு செய்துள்ளார்’ எனக் கூறுகிறார் ஷெரில் கிர்ஷென்பாவ்ம். 


பப்பவுவா நியூ கினியாவின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள ட்ரோப்ரியாண்ட் தீவுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் கண் இமைகளைத் தங்கள் இணையின் கண் இமைகளோடு சேர்த்து தடவி தங்கள் காதலை வெளிப்படுத்துகின்றனர்.  `நாம் மதிப்பிடும் ரொமான்ஸ் போல இது இல்லை என்றாலும், அந்த மக்களுக்குள் இது சரியாக வேலை செய்கிறது. இதழிலோ, வேறு எங்கோ முத்தமிடுவது மட்டும் முக்கியம் அல்ல.. தங்களுக்குள் நெருக்கத்தை வெளிப்படுத்தும் அந்தந்த தருணங்களே முக்கியம்’ என்கிறார் எழுத்தாளர் ஷெரில் கிர்ஷென்பாவ்ம். 



இதழ் முத்தம் என்பது மனிதர்களுக்கே உரிய பிரத்யேக நடவடிக்கை. முத்தம் என்பது பரிணாம வளர்ச்சி காரணமாகத் தோன்றியது எனக் கூறினால், நாம் ஏன் விலங்குகள் இதழ் முத்தமிடுவதைப் பார்க்க முடிவதில்லை என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. 


கடந்த 2015ஆம் ஆண்டின் போது செய்தியாளர் மெலிசா ஹோகன்பூம் இந்தக் கேள்விக்கு விடை தந்துள்ளார். மனிதர்களின் நுகர்வுத் தன்மை விலங்குகளோடு ஒப்பிடுகையில் குறைவாக இருப்பதால் இவ்வாறு நெருக்கம் ஏற்படுவதாகவும்,  தொடர்ந்து அது முத்தமாக உருமாறியதாகவும் கூறுகிறார்.