கணவன் - மனைவிக்கு இடையேயும் சண்டை வருவது இயல்புதான். அதனை ஆரம்பக் கட்டத்திலேயே குழந்தைகள் பார்வையில் இல்லாத வகையில், தங்களுக்குள் பேசித் தீர்த்து வன்மத்தை வளர்க்காமல் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்கையை இன்பமாகக் கழிக்கலாம். குறிப்பாக ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ரோல்மாடல் தன் பெற்றோர்தான். அதன்படி தன் பெற்றோரைப் போலவே என் வாழ்க்கையும் மகிழ்ச்சியும், முடிந்தவரையில் பிறருக்குப் பயன்தரும் வகையிலும் அமைய வேண்டும் என ஒரு குழந்தை நினைக்க வேண்டும்.


மாறாக தன் பெற்றோரின் சண்டை, வன்மத்தைப் பார்த்து வளர்ந்து, அதுப்படியே தன் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளக் கூடாது. குழந்தைகள் மனித வளத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. அவர்கள் இருக்கும் இடத்தை மிகவும் மகிழ்ச்சியானதாக மாற்றிவிடுவார்கள். அந்த மகிழ்ச்சி பெற்றோர்கள், தாத்தா-பாட்டி, உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சமூகத்தினர் என எல்லோர் வாயிலாகவும் கிடைக்க வேண்டும். அதில் முதலானவர்களும் முடிவானவர்களும் பெற்றோரே. இப்படி கட்டமைக்கப்பட்டுள்ள நம் மனித வாழ்வில், கணவன் மனைவி இடையே ஏற்படும் சிறு சிறு சண்டைகள் கூட குழந்தைகளை பெரிதும் பாதிக்கிறது.



பெற்றோர் மனநிலை என்னவாக இருக்க வேண்டும்?


பெற்றோராகிய உங்களுக்கு இது சாதாரணமாக தோன்றலாம். ஆனால், உங்கள் சண்டை மற்றும் நடவடிக்கைகள் காரணமாக உங்கள் குழந்தையின் மன நலன் பாதிக்கப்படலாம். குறிப்பாக, கணவன், மனைவி இருவருமே கோபத்தில் ஒருவரை, ஒருவர் மிகுந்த மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொள்வார்கள். அதை பார்க்கும் குழந்தையின் மனதில் எந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். பெற்றோர் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டே இருந்தால், அதன் விளைவாக குழந்தைகளுக்கு கவலை, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இவ்வளவு ஏன்? எதிர்காலத்தில் அவர்கள் யாரிடமும் ஒட்டி, உறவாட விரும்ப மாட்டார்கள். இத்தகைய சூழலில், பெற்றோர் தங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்தும், பிரச்சினைகள் குறித்தும் தனிப்பட்ட முறையில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக உங்கள் குழந்தைகளின் நலன் பாதிக்கக் கூடாது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


குழந்தைகள் வாழ்வை கற்குமிடம்:


ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரிடம் இருந்து அறிவுரை, அன்பு, அரவணைப்பு, வழிகாட்டுதல் போன்றவற்றை கற்றுக்கொள்கிறார்கள். நாம் எப்படி வாழ்கிறோமோ அதைப்பார்த்துத்தான் வாழ கற்றுக்கொள்கிறார்கள். அதனை எந்த பெற்றோரும் அமர்ந்து வகுப்பெடுக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் வாழ்க்கை மூலமாகவே அணைத்தயும் பெறுகிறார்கள். ஆகவே, இதுபோன்ற சமயத்தில் பெற்றோருக்கு இடையேயான வாக்குவாதங்களை பார்க்கும் குழந்தைகளின் மனதில் குழப்பம் ஏற்படக் கூடும். வளர்ந்த குழந்தைகள் தான் என்றில்லை. 6 மாத குழந்தைகள் கூட பெற்றோரின் சண்டைகளால் பாதிக்கப்படும். இதேபோன்று 19 வயது வரையிலான இளம் பருவ பிள்ளைகள் அனைவருமே பெற்றோரின் சண்டையால் பாதிக்கப்படுவர்.



எதிர்கால பாதிப்புகள்:


பெற்றோர்கள் இடையே தீர்க்கப்படாமல் தொடர்ந்து நீண்ட நாட்கள் நடைபெறக் கூடிய சண்டை என்பது, குழந்தையை வாழ்க்கை முழுவதும் பாதிக்கும். பெற்றோரைப் போல, அவர்களுக்கும் திருமணம் நடந்த பிறகு, வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த முடியாமல் சிரமம் அடைவார்கள் என்று உளவியல் அறிக்கைகள் கூறுகின்றன. சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பெற்றோரை பார்த்து, பார்த்து வளரும் குழந்தைகள் இயல்பாகவே மூர்க்கத்தனமாகவும், விரைவில் கோபம் அடைபவர்களாகவும் மாறுகிறார்கள்.


இதற்கு என்னதான் தீர்வு?


சண்டைகளும், வாக்கு வாதங்களும் இயல்பானவை என்றாலும், அதை வெகுவாக குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதையும் மீறி சண்டை நடைபெற்றால், அது குழந்தைகளை பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் விவாதங்களை தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் முன்பாக வேண்டாம். அமைதியாக பேசி சமரசம் அடைய முயற்சி செய்யவும். வெறுமனே சத்தம் போட்டுக் கொண்டிருப்பதால் எந்தத் தீர்வும் ஏற்பட்டு விடாது. ஒருவருக்கு ஒருவர் மதிப்பளித்து பேசுங்கள். அதை பார்த்து வளரும் உங்கள் குழந்தையும் எல்லோருக்கு மதிப்பு அளிக்கும் நபராக இருக்கும்.