கண்களுக்குக் கீழ் உள்ள சருமம் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதால் அதற்கு அதிக அளவில் கவனிப்புத் தேவைப்படுகிறது. ஆனால் இந்த பகுதிக்கு நாம் தேவையான அளவு கவனம் செலுத்துவதில்லை. இதனால் விரைவிலேயே வீங்கிய கண்கள், கரு வளையங்கள் மற்றும் சோர்வான கண்கள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, உங்கள் கண்களைப் பாதுகாப்பாகவும், கவனத்துடனும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். கண் சீரம் என்பது கண்களின் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. நீங்கள் இதுவரை எந்த சீரமும் உபயோகிக்கவில்லை என்றால் வீட்டிலேயே உங்கள் கண்களுக்கு ஏற்ற சீரத்தினை தயாரித்துப் பயன்படுத்தலாம்.

 

 



 

கரு வளையங்கள்

 

கரு வளையங்கள் ஏற்பட்ட கண்களுக்கு ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் தேவைப்படுகிறது. ரோஸ்ஷிப் எண்ணெயில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் சருமத்தை ஈரப்பதமாக்கி கண்களைச் சுற்றியுள்ள இருண்ட வட்டங்களைச் சரி செய்து சுருங்கிய சருமத்தை சரி செய்ய உதவுகிறது. பாதாம் எண்ணெயில் உள்ள ரெட்டினோல் மற்றும் வைட்டமின் ஈ கண்களின் கீழ் உள்ள கருவளையங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உதவுகிறது. வைட்டமின் ஈ ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு கண்களைச் சுற்றி இருக்கும் கரு வளையங்களைச் சரி செய்து சருமத்தினை புத்துயிர் பெறச் செய்ய உதவுகிறது.

 



 

தேவையான பொருட்கள்

 

7 தேக்கரண்டியளவு இனிப்பு பாதாம் எண்ணெய், 5 தேக்கரண்டியளவு ரோஸ்ஷிப் எண்ணெய், 2 வைட்டமின் ஈ மாத்திரை எண்ணெய் எடுத்து பாட்டிலில் சேர்த்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து ஷேக் செய்து கொள்ளுங்கள். படுக்கைக்குச் செல்லும் முன்பு இந்த கலவையை எடுத்து மெதுவாக கண்களைச் சுற்றித் தடவி மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் எழுந்து கழுவுங்கள். இதனை இரண்டு வாரம் தொடர்ந்து செய்வதினால் நல்ல மாற்றத்தினை விரைவில் காணலாம்.

 



 

கண்களுக்குக் கீழ் வீக்கம்

 

காபித் தூளில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் கண்களுக்குக் கீழ் பாதிக்கப்பட்ட பகுதியைச் சரி செய்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. பாதாம் எண்ணெய் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து சருமத்தை மென்மையாக வைக்கிறது. ஆமணக்கு எண்ணெய் கண்களின் கீழ் உள்ள வீக்கத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது.

 

தேவையான பொருட்கள்

 

1/4 கப் காபி தூள், 1/2 கப் இனிப்பு பாதாம் எண்ணெய், 2 தேக்கரண்டியளவு ஆமணக்கு எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் காபித்தூள் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கலக்குங்கள். இந்த கலவையை 5-7 நாட்களுக்கு மூடி வையுங்கள். பின்னர் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கி பாட்டிலில் ஊற்றி வைத்து தேவையான போது எடுத்து கண்களுக்குக் கீழ் தடவி மசாஜ் செய்யுங்கள். நீங்கள் தூங்குவதற்கு முன் உங்கள் கண்ணின் கீழ் பகுதியில் கலவையை மெதுவாக மசாஜ் செய்து விட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து முகத்தினை கழுவுங்கள். இந்த முறையை நீங்கள் தினமும் பின்பற்றலாம்.

 



 

கண் வீக்கம்


உங்கள் சருமத்தில் ஈரப்பதம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதற்கான ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ரோஸ்மேரி எண்ணெயில் நிறைந்துள்ளன. சருமத்தை பாதுகாக்கவும் உதவுகின்றன. இதனால் உங்கள் கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை விரைவில் குறைக்க உதவும். எலுமிச்சை எண்ணெயில் வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால் இவை சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களில் இருந்து பாதுகாக்கின்றன. லாவெண்டர் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கண்களைச் சுற்றியுள்ள பகுதியை மென்மையாக்க உதவுகிறது.

 

தேவையான பொருட்கள்



12 சொட்டு ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய், 6 சொட்டு லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய், 6 சொட்டு எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய், 5 மில்லி பாதாம் எண்ணெய் ஆகியவற்றைப் பாட்டிலில் ஒன்றாகக் கலந்து கண்களைச் சுற்றி மசாஜ் செய்து 2 முதல் 3 மணி நேரம் விட்டு பின்னர் கழுவுங்கள். இந்த முறையை வாரத்தில் 2 முதல் 3 முறை செய்யலாம்.