புரதம் நிறைந்த முளைக்கட்டியப் பயிர்களை காலை உணவாக எடுத்துக்கொள்ளும் பொழுது, நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், உடலில் தசை ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக உள்ளது.


காலை சிற்றுண்டி எடுத்துக்கொள்வதற்கு ஒருபோதும் நாம் மறந்து விடக்கூடாது. நாள் முழுவதும் ஓடி உழைப்பதற்கு காலை உணவு அவசியமான ஒன்று. வழக்கமாக இட்லி, தோசை, பொங்கல் , பூரி போன்றவற்றினை எடுத்துக்கொள்ளாமல் உடல் ஆரோக்கயத்தோடு தொடர்புடைய உணவுகளை எடுத்துக்கொண்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவே இருக்கலாம். அப்படி என்னவகையான உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தாக அமையும் என்பதில் பலருக்கு பல்வேறு கேள்விகள் இருக்கக்கூடும். இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாகத்தான் பல ஊட்டசத்து நிபுணர்கள், காலை உணவில் என்ன எடுத்துக்கொண்டால் சிறந்தாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். அதன்படி, புரதம் நிறைந்த முளைக்கட்டியப் பயிர்கள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருவதோடு அதில் அத்தியவாசிய நுண்ணூட்டச்சத்துக்கள் பல நிறைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.






எனவே தினமும் அவசர அவசரமாகக் கிடைத்ததைச்சாப்பிடாமல் முளைக்கட்டியப் பயிர்களுடன் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் தசை வலிமையாக இருக்கும். அதோடு உடலில் அதிகப்படியான கலோரிகள் ஏற்படாது, குளுக்கோஸ் அளவினைக்கட்டுப்பாடாக வைத்திருக்கவும் உதவுகிறது. இந்த முளைக்கட்டி பயிர்களை காலை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளும் பொழுது,  நறுக்கிய வெள்ளரி, தக்காளி மற்றும் வெங்காயத்தை சேர்த்து சாப்பிடாலம். மேலும் அதில் சிறிது எலுமிச்சை மற்றும் மசாலாப்பொருட்களை சேர்த்து சாப்பிடும் பொழுது இன்னமும் கூடுதல் நன்மைகளை நாம் பெற முடியும். குறிப்பாக இந்த முளைக்கட்டியப் பயிர்களில்,  புரதம், மெக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு மற்றும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது.   இதோடு மட்டுமில்லாமல் காலை சிற்றுண்டியில் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் வேறு என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.


 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்:  முளைக்கட்டியப் பயிர்களில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. எனவே தினமும் காலை உணவாக இதனை எடுத்துக்கொள்ளும் போது, உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களுக்கு சக்தி வாய்ந்த தூண்டுதல்களை உருவாக்குகின்றன. எனவே எந்தவித நோய்கள் மற்றும் தொற்று நோய்களை எதிர்த்துப்போராட்டக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியினை உடலில் அதிகரிக்கிறது. மேலும் வைட்டமின் ஏ வும் முளைக்கட்டிய பயிர்களில் காணப்படுகிறது.


சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும்: சருமம் பொலிவுடன் இருக்க எந்த முயற்சியினை எடுக்கத்தேவையில்லை எனவும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருள்களைச்சாப்பிடும் பொழுது இயற்கையாக சருமம் பிரகாசமாக காணப்படும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அதிலும் காலை உணவாக முளைக்கட்டியப் பயிர்களை எடுத்துக்கொள்ளும் பொழுது, உடல் ஆரோக்கியத்துடனும், அதிக அளவிலான ஊட்டச்சத்து சருமத்தினை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.


செரிமான பிரச்சனைக்குத் தீர்வு: முளைக்கட்டி தானியங்களில் நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது. எனவே செரிமானப்பிரச்சனைக்கு தீர்வாக உள்ளது. அதோடு உடலில் குடல் இயக்கத்தினை மேம்படுத்த மற்றும் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.






இதுபோன்று பல்வேறு விதமாக நன்மைகள் இந்த முளைக்கட்டிய தானியங்களில் உள்ளதால் தான் நம் முன்னோர்கள் இதனைப்பின்பற்றியுள்ளனர். அதான் இன்னமும் உடல் ஆரோக்கியத்தோடு கம்பீரமாக வாழ முடிகிறது என்பதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே இனிமேலாவது காலை சிற்றுண்டிகளைத் தவிர்ப்பதை நிறுத்துவதோடு, புரதம் நிறைந்த முளைக்கட்டி பயிர்களை உட்கொள்வதற்கு கொஞ்சம் முயற்சி செய்துப்பார்க்கலாம்.