கற்பூரவல்லி இலைகள், குளிர்ச்சியால் உண்டாகும் சளிமையப்போக்குவதற்கு உதவுவதால் குளிர்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு சிறந்த  நிவாரணியாக உள்ளது.


நம்முடைய முன்னோர்கள் இயற்கையுடனே வாழ்ந்து வந்ததால் தான் எந்த பருவநிலைக்கு ஏற்றவாறும் தங்களைப் பக்குவப்படுத்திக்கொண்டனர். ஆனால் இன்றைய தலைமுறையான நாம் அவ்வாறு இல்லை. இதன் காரணமாகத்தான் லேசான மழைப்பெய்தாலே சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறோம். உடனே மருத்துவரைத்தேடி அலையும் காலத்தில் உள்ளோம். ஆனால் நம் முன்னோர்கள் அதற்கு எதிர்மறையானவர்கள் உடல் வலியோ? ஜலதோஷமா? என உடலில் எந்தப்பிரச்சனை ஏற்பட்டாலும் காடுகளில் உள்ள செடிகளைத் தேடி செல்வார்கள். அதிலும் குளிர்காலம் என்றால் சளியே பிடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள பல மூலிகை செடிகளை அவர்கள் பயன்படுத்தினார்கள். அதில் ஒன்றான கற்பூரவல்லியின் சிறப்பைப்பற்றி தான் இன்றைக்கு நாம் பார்க்கவுள்ளோம்.



பொதுவாக கற்பூரவல்லியை நுகர்ந்தாலே பிணி அண்டாது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொரு வீட்டிலும் இச்செடியை வளர்த்து வந்தார்கள். ஆனால் இன்றை நவீன சூழலில் நகரங்களில் இந்த மூலிகைச் செடிகளை வளர்க்க நேரமில்லை. சொல்லப்போனால் இடமும் இல்லை என்று தான் கூறவேண்டும். இதுபோன்ற நேரங்களில் கடைகளில் விற்பனையாகும் கற்பூரவல்லி இலைகளை வாங்கியாவது டீ போட்டு பருகுங்கள்.  இந்நேரத்தில் உங்களுக்கு கற்பூரவல்லி இஞ்சி டீ எப்படி போடுவது? என்று தற்போது பார்க்கலாம்.


கற்பூரவல்லி இஞ்சி டீ போடுவதற்குத் தேவையானப் பொருள்கள்:


கற்பூரவல்லி - 5 இலைகள்
இஞ்சி - 1/2 துண்டு
டீத்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 சொட்டு
தண்ணீர் - 2 கப்
தேன் - 1 ஸ்பூன்





செய்முறை:


முதலில் கற்பூரவல்லி மற்றும் இஞ்சியைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் பாத்திரத்தில்  தண்ணீர் ஊற்றி கொதி நிலைக்கு வரும் போது, அதனுள் டீத்தூள், கற்பூரவல்லி மற்றும் இஞ்சி சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

பின்னர் கற்பூரவல்லி மற்றும் இஞ்சி சேர்த்த தண்ணீர் அரைப் பாதியாக குறைந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.


இறுதியில் அதனுள் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்கலாம்.

இதுப்போன்று கற்பூரவல்லி இஞ்சி டீயை தினமும் குளித்து வந்தால் சளி, இருமல் நீங்குவதோடு, சுவாசப்பாதை அடைப்பை சீராக்கும் தன்மைக்கொண்டுள்ளது.

தற்போது நம்மை பயங்கர குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில், இதுபோன்று மூலிகை டீயை கொஞ்சம் டிரை செய்யுங்கள். நிச்சயம் சளி பிரச்சனை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை இதனை குழந்தைகளுக்குக் கொடுக்க விரும்பினால் கற்பூரவல்லி டீயுடன் தேன் கலந்து குடிக்கலாம். மேலும் இந்த கற்பூரவல்லி இலைகள் உடல் சூட்டை தணிக்கவும், சீதளத்தால் உண்டாகும் சளிமையப்போக்குகிறது. மேலும் வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.