கருத்தடைக்கு நீண்ட கால, பாதுகாப்பான பலனளிப்பது கர்ப்பப்பையில் பொருத்தப்படும் கருத்தடை சாதனங்களாகத் தான் இருக்கின்றன. ஆனால், இத்தகைய கருத்தடை சாதனங்களால் பீரியட்ஸ் பிரச்சனை வருமா என்ற சந்தேகம் பெண்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. 


கருத்தடை சாதனங்களால் பீரியட்ஸ் பிரச்சனை வருமா? உண்மை அறிவோம் வாருங்கள்.


கர்ப்பப்பையில் பொருத்தப்படும் கருத்தடை சாதனங்களால் நீண்ட காலத்திற்குப் பின்னர் மாதவிடாய் சுழற்சியில் நிச்சயமாக மாறுதல் வரலாம் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். காப்பர் ஐயுடி பொருத்தினால், மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கும். ஆனால், நாளடைவில் அதிக உதிரப் போக்கோ. இல்லை அதிக நாட்களுக்கு மாதவிடாய் உதிரப்போக்கு இருத்தலோ இருக்கலாம். ஆனால், ஹார்மோன் ஐயுடிக்களான மிரேனா, ஸ்கைலா, லிலெடா ஆகியனவற்றைப் பயன்படுத்தும் போது சிலருக்கு மாதவிடாய் வராமல் கூட இருப்பதைக் காண முடிகிறது. 


இது குறித்து வெய்ஸ் மருத்துவமனையின் பெண்கள் நல சிகிச்சை பிரிவின் மருத்துவர் நிகோல் பட்லர் கூறியதாவது:
ஹார்மோனல் ஐயுடி பொருத்துவதால் முறையற்ற மாதவிடாய் உதிரப்போக்கு ஏற்படலாம். அது இயல்பானதே. ஆனால், அதுவேஎ சாதனத்தைப் பொருத்தி ஐந்தாறு மாதங்களுக்கு மேலும் இது நீடித்தால் உடனடியாக உங்களின் மருத்துவரை அணுகுங்கள்.




இயல்பான ஸ்பாட்டிங்குக்கும் முறையற்ற மாதவிடாய் சுழற்சிக்கும் இடையேயான வேறுபாட்டை உணர்த்துவது மிகவும் கடினம். என்னிடம் வரும் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை ஒரு கேலண்டரில் குறிப்பேன். அதன் மூலமே அவர்களிடம் அவர்களது சுழற்சி இயல்பாக இருக்கிறதா இல்லை ஒழுங்கற்றதாக இருக்கிறதா என்பதைத் தெரிவிப்பேன். அதன்பின்னர் அவர்களின் உதிரப்போக்கின் அளவைப் பொருத்து அவர்களுக்கு உண்மையிலேயே சிகிச்சை தேவைப்படுகிறதா இல்லை அவர்களுக்குப் புரிதல் குறைபாடு உள்ளதா என்பதையும் தெரிவிப்பேன்.


அதனால், பெண்கள் பொதுவாகவே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஹார்மோன் ஐயுடி பொருத்தியிருந்தால் 6 மாதங்கள் வரை சில நேரங்களில் அழையா விருந்தாளியாக ரத்தக்கசிவு இருக்கும். அவ்வாறு 6 மாதங்களுக்குப் பின்னரும் உதிரப்போக்கு இருந்தால் அவர்களுக்கு நாங்கள் ஹார்மோன் மாத்திரைகளைத் தருகிறோம். அதன் மூலம் கர்ப்பப்பையின் உள்புறம் வலுப்பெறுகிறது. இதனால், இத்தகைய ரத்தப்போக்கு நின்றுவிடுகிறது என்றார்.


கருத்தடை சாதனங்கள் தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கிறது. உலகம் முழுவதுமே மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் எளிய முறையாக பெண்களுக்கான கருத்தடை சாதனங்கள் கருதப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்து கொண்டால் எப்போதுமே குழந்தை பெற முடியாமல் போகுமென்பதால் இத்தகைய கருத்தடை சாதனங்களுக்கு வரவேற்பு உள்ளது.


இருப்பினும், ஆண்களும் வாஸ்க்டாமி எனப்படும் கருத்தடை அறுவை சிகிச்சையை செய்து கொண்டோ இல்லை வேறு சாதனங்களைப் பயன்படுத்திக் கொண்டோ பெண்களின் இந்த அசவுகரியங்களுக்கு விடை கொடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக இருக்கிறது.