வேட்டைத் துணைவன் - 4


பட்டி / கிடை நாய்கள்


தனி இனமாக அங்கீரிக்கப்படாத நாட்டு நாய்களுக்கு வழங்கப்படும் வேறு ஒரு பெயர்தான்  “பட்டி நாய்கள்” என்பது,  இனி வரும் கட்டுரைகளில் நாம் பார்க்கவிருக்கும் தமிழக நாயினங்கள் அத்தனையும் ஏதோ ஒரு வகையில் இதனுடன் கலந்தே தீரும் என்பதால் இவை பற்றிய அறிமுகமும் நமக்கு அவசியமாகிறது. ஏற்கனவே போன கட்டுரையில் சொன்னது போல இதுவும் ஒரு இடப்பெயர்தான். கிராமங்களில் ஆடு மாடுகளை பட்டியில் அடைத்து வளர்ப்பதை நாம் கேள்விபட்டிருப்போம். கோவில்பட்டி, செவல்பட்டி எனப் பெயர்தாங்கி வரும் ஊர்களின் மூலமும் அதுவே.



ஊர்களில் அமைந்திருக்கும் பட்டியை அப்படியே இடம் மாற்றி விளை நிலத்தில் அமர்த்துவதற்கு “கிடை” அமர்த்துதல் என்று பெயர். மண்ணில் உயிர் வித்து வேர்பிடிப்பதற்கான உரமும், நிலத்தின் பௌதீகத் தன்மையும் இதன் மூலம் பெருகுவதுண்டு. கரிசல் இலக்கியத்தின் முன்னோடியான கி. ராஜநாராயணன் “கிடை” யில் காவல் காக்கும் நாய்களை” கிடைநாய்கள்” என்று கதைகளில் குறிப்பிட்டுள்ளார்.  அதுவும் மிகப் பொருத்தமான பெயர்தான். சூழலியலாளர் மா. கிருஷ்ணன் சில பதிவுகளில் இவற்றை “herd dogs” என்றுதான் பதிவிட்டார்.


பெரும்பாலான பிரித்தானியர்கள் இந்நாய்களை “sheep dog” என்று குறிப்பிட்டு இருந்தனர். . கிட்டத்தட்ட இதே அர்த்தம் தொனிக்கும் விதமான பெயர்களை நாம் உலகம் முழுவதும் பார்க்க முடியும்.  Sight hound என்ற பிரிவில் நாம் பார்க்கும் கூர் முக அமைப்பு கொண்ட வேட்டை நாய்களைப் போன்ற தலையமைப்பு  இவற்றுக்கு கிடையாதென்பதே அணைத்து வகை “sheep dog”களுக்கும் உள்ள பொதுவான ஒற்றுமை. இந்தியாவின் “sheep dog” வகைகளை வடக்கு,  தெக்காக நாம் ரெண்டு விதமாகப் பிரிக்கலாம்.


வடக்கில் Himalayan sheep dog, Bakharwal போன்றவை அவற்றுக்கான உதாரணமாக எடுத்துக் கொண்டால் அவை அளவில் பெரியதாகவும், குளிர் தாங்கும் அதிக  ரோமத்துடனும், தனித்துவமான உருவத்துடனும் காணப்படும்.  தென்னிந்திய பட்டி நாய்கள் ஒப்பிட்டு அடிப்படையில் அவற்றை விட சிறியதாகவும், அதே நேரம் சாதாரணமாக காணப்படும் நாட்டு நாய்களை விட பெரியவையாகவும், நல்ல தலைக் கட்டும் உடல் கட்டும் கொண்டு காணப்படும். ஆந்திராவின் பாண்டிகோனா நாய்களும் நமது கிடை நாய்களும் ஒன்றேதான். இந்த நாய்கள் அடிபடையில் நல்ல காவல் திறனும் கோவக்குறியும் உடையவை என்பதால் அதிகம் பருவேட்டைக்கும் பயன்படுத்தப் பட்டது. 1901 ஆம் ஆண்டு Journal of the bombay natural history society” vol 14 என்ற புத்தகத்தில் lieut. Gen.w.obborn “indian sheep dogs and another indian dog” என்ற தலைப்பின் கீழ் பெல்லாரி அருகே 8 நாய்களும், 16 ஆட்களும் கொண்ட குழு மிளாவை வேட்டையாடியதை குறிப்பிடுகிறார். வாரம் இரு முறை நடக்கும் வேட்டைகளில் ஒரு முறை கூட இந்த நாய்கள் இரையை தவற விட்டது கிடையாது என்றும் பதிவு செய்கிறார் . அநேக கிராமங்களில்  பன்றி வேட்டை  பல நூறு ஆண்டுகளாக நடக்கும் ஒன்றுதான், அது ஒன்றும் புதிதல்ல என்றாலும் அதில் பதிவிட்ட சொல் “ sheep dog”  என்பதால் நாம் அதை கவனத்தில் கொண்டு நோக்க வேண்டியதுள்ளது.



“The Indian dog” என்ற புத்தகத்தை எழுதிய W.V.soman,, “The pariah and the mongrel” என்ற பெயரில் நாட்டு நாய்கள் பற்றிய கட்டுரையை எழுதிவிட்டு, “The existing Indian breeds of dog including those of pakistan and tibet “ என்ற பிரிவில் அவர் இந்திய நாய் இனங்களாகக் கருத்தும் பதினாறு வகை நாய்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று அந்த 16 கட்டுரையில் கடைசிக் கட்டுரை பட்டி நாய் பற்றியது என்பதுதான். அக்கட்டுரையில்  இவை தமிழ் நாட்டைப்பூர்வீகமாகக் கொண்டது, ஆடுகளை வனவிலங்குகளிடம் இருந்து காப்பாற்ற வல்லது போன்ற அடைப்படை தகவல்களை தவிர்த்து மேலாதிக்க விவரங்கள் இல்லை என்ற போதிலும் அத்தலைப்பில் பதினாறாவதாக பட்டி நாய்கள் பெயரை இடம் பெறச் செய்வதன் மூலம் அவர் இவற்றை ஒரு தனி இனமாகவே எண்ணி இருக்கக்கூடும் என்று புரிந்துகொள்ள முடிகிறது.  


அப்புத்தகம் வெளியாகி  கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பின்னர் காட்டுயிர் ஆர்வலர் தியோடார் பாஸ்கரன் அவர்கள் எழுதிய “The book of indian dogs” என்ற புத்ததில் தாம்  இந்திய இனங்களாக கருத்திய  25  வகை நாய்கள் குறித்து கட்டுரைகள் எழுதியதோடு working dog என்ற தலைப்பில் இருபத்தி ஐந்தில் ஒன்றாக பட்டி நாய்களையும் இணைத்திருந்தார். இருவருமே இதை நாட்டு நாய்கள் என்று குறிப்பிடவில்லை.  அதே போல  இருவர் குறிப்பிட்ட படங்களிலும் உள்ள நாய்கள் ரெண்டுமே குத்து காது உடையவை. அதற்க்காக அப்படியே தான் வர வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்பதை நினைவில் சொல்க. அப்படியென்றால் இவை தனி இனமா? என்றால் நிச்சியம் இல்லை என்று தான் கூற வேண்டும்.அடிப்படையில் இவை நாட்டு நாய்களே.


நாட்டு நாய்களில் அதிகம் கலப்புகள் அற்ற  நல்ல பருவட்டான, கோவக்குறி உடைய நாய்கள் தான் பட்டி காவலுக்கு அமர்த்தப் படும். தொடர்ந்து ஆடுகளில் நல்ல பருங்கால் அமைப்பு உடைய கிடாக்கள் கீதாரிகளால் தேர்வு செய்து எடுக்கப்படுவது போலவே இந்நாய்களும் நல்ல கால் கனம் மற்றும் தலைக்கட்டு பார்த்து கிடைக் காவலர்களால் தெளித்து எடுக்கப்படும் . அப்படியே இவை பெருக்கப்பட்டது. ஆக இவை நம் நாட்டு நாயின் தெளிந்த உறுபடியே அன்றி வேறு இல்லை . அந்த தெளிவுடன் மா. கிருஷ்ணன் மட்டுமே  நாட்டுநாய்கள் பற்றிய கட்டுரையில் பட்டி நாய்களையும் இணைத்து எழுதி இருப்பதை  சில இடங்களில் பார்க்க முடிகிறது.


சுமார் இரண்டு  நூற்றாண்டுகளுக்கு முன்பு   இந்த பட்டி நாய்களே  சிப்பிப்பாறை / மணியாச்சி /கோவிப்பட்டி /ராம்நாடு வட்டாரத்தில் வேறு ஒரு உன்னதமான நாய் இனத்திற்கு வித்தாக அமைந்தது, அதன் வரலாறு என்ன என்பதை இனி வரும் பகுதிகளில் விரிவாகப் பாப்போம்.