மாம்பழம் முக்கனிகளில் ஒன்று. இதன் சுவை அபாரமானதாக இருக்கும். பங்கனபள்ளி, ருமானி, செந்தூரா, என மாம்பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. மாம்பழத்தில் சுவையான கேசரி செய்யலாம். அதுவும் மிக குறைந்த நேரத்தில் எளிமையாக இந்த கேசரியை செய்து விட முடியும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த கேசரியை விரும்பி சாப்பிடுவர். வாங்க மாம்பழ கேசரி எப்படி செய்வதென்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் 

மாம்பழம் – 1 

சர்க்கரை – முக்கால் கப்

குங்குமப்பூ – இரண்டு சிட்டிகை

ஏலக்காய் – 3

(இவையனைத்தையும் மாம்பழத்துடன் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்)

ரவை – ஒரு கப் (நெய்யில் வறுத்துக்கொள்ள வேண்டும்)

முந்திரி – ஒரு கைப்பிடி (நெய்யில் வறுத்துக்கொள்ள வேண்டும்)

செய்முறை

மாம்பழத்தின் சதை பகுதியை மட்டும் எடுத்து மிக்சியில் அடித்து வத்துக் கொள்ள வேண்டும். முக்கால் கப் மாம்பழம் வேண்டும். சிறியதாக இருந்தால் இரண்டு மாம்பழங்களை எடுத்துக் கொள்ளலாம். 

சர்க்கரை, ஏலக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை மாம்பழக்கலவையுடன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். 

கடாயில் நெய்யை சூடாக்கி, அதில் ரவை மற்றும் முந்திரியை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  கேசரியில் வைத்து அலங்கரிப்பதற்காக 6 முந்திரி பருப்புகளை தனியே எடுத்து வைத்து விட வேண்டும். 

அதில் அரைத்து வைத்த மாம்பழ கலவையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

மற்றொரு அடுப்பில் தண்ணீரை கொதிக்க வைத்து, ரவை கலவையை அதில்  சேர்த்துக் கிளற வேண்டும்.

தொடர்ந்து கிளறி இறக்கினால், சுவையான மாம்பழ கேசரி தயார். இதன்மீது முந்திரி பருப்புகளை வைத்து அலங்கரித்துப் பரிமாறலாம். 

மாம்பழத்தின் நன்மைகள் 

மாம்பழம் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. 

கல்லீரலுக்கு மாம்பழம் நன்மை தரும் உணவு. குடலில் உள்ள தொற்றுகளை குணப்படுத்தவும் மாம்பழம் உதவுகிறது. 

புதிய ரத்த அணுக்கள் உற்பத்தி செய்வதற்கு மாம்பழம்  உதவுவதாக சொல்லப்படுகிறது. மலச்சிக்கல் நீங்க மாங்காய் உதவுகிறது. உப்பு மற்றும் தேன் தொட்டு சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மாம்பழச்சாறு அருந்தினால் கோடை காலத்தில் வியர்வை மூலம் வெளியேறும் சோடியம் குளோரைட் மற்றும் இரும்புச்சத்து தடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
 

மாம்பழத்தை கடித்து சாப்பிடுவதால் பற்கள் பலமடைகின்றன. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு தடுக்கப்படுகிறது. வாய் துர்நாற்றம் மற்றும் பல் சொத்தையாவது தடுக்கப்படுகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்க 

Flood Warning: மக்களே உஷார்.. வெள்ள அபாய எச்சரிக்கை; செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் மிகை நீர்