2 கப் தேங்காய் துருவலை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். தேங்காயை துருவும் போது அடியில் உள்ள ப்ரெளன் நிறம் வராமல் பார்த்துக் கொள்ளவும். அப்போது தான் புட்டிங் தூய்மையான வெள்ளை நிறத்தில் இருக்கும். இதனுடன் 2 ஏலக்காயை சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை எடுத்த அதே கப்பில் இரண்டு கப் அளவு தண்ணீரை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 


இப்போது இந்த தேங்காய் பாலை ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்து முக்கால் பாகம் அளவு தேங்காய் பாலை இந்த பாத்திரத்தில் சேர்க்கவும். மீதி பாலை தணியே எடுத்து வைத்துக் கொள்ளவும். முக்கால் பாகம் தேங்காய் பால் எடுத்துள்ள பாத்திரத்தில் அரை கப் சர்க்கரை சேர்க்கவும். தேங்காய் துருவல் அளந்த அதே கப்பால் சர்க்கரையை அளக்க வேண்டும். இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஒரு கரண்டியால் கலந்து விட்டு இதை அப்படியே எடுத்து வைத்து விட வேண்டும். கால் கப் தேங்காய் பால் வைத்துள்ள பாத்திரத்தில் கால் கப் சோள மாவு சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து விட வேண்டும். இப்போது முக்கால் பாகம் பால் உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து வேக விடவும். லேசாக கொதி வந்தவுடன் அடுப்பின் தீயை மேலும் குறைத்து கரைத்து வைத்துள்ள சோளமாவை இத்துடன் சேர்த்து 2 நிமிடம் தொடர்ந்து கரண்டியால் கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ( தேங்காய் பால் அதிகம் கொதித்தவுடன் சோளமாவு கரைசல் சேர்த்தால், தேங்காய்பால் திரிந்து விடும்) இப்போது இனிப்பை சரி பார்க்கவும். உங்களுக்கு தேவைப்பட்டால் மேலும் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.  இப்போது இது ஒரு வெண்ணெய் போன்று திரண்டு வரும். இப்போது அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது ஒரு கண்ணாடி பவுலை எடுத்து இந்த கலவை சூடாக இருக்கும் போதே இதில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.  சூடு ஆறியதும் இதை மூடி போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு மணி நேரத்திற்கு பின் எடுத்து லேசாக ஷேக் செய்து விட்டு ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இதை கத்தியால் வெட்டி பரிமாறலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.