பட்டினி எவ்வளவு உடலுக்கு தீங்கு விளைவிக்குமோ அதேபோல் அதே அளவுக்கு அதிகமாக உண்ணுதலும் தீங்கு விளைவிக்கும். எனவே நாம் பசியறிந்து உண்ண வேண்டும். அளவாக உண்ண வேண்டும். 


அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும். அதை எப்படி தவிர்ப்பது என்பதற்கான ஐந்து டிப்ஸ் இதோ உங்களுக்காக. இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமென்றால் இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணவும்.


1. காலை உணவை தவிர்க்கக்கூடாது.
காலை உணவு உடலுக்கு மிகமிக அவசியம். காலையில் ஓர் அரசனைப் போலவும் இரவில் ஒரு யாசகனைப் போலவும் உணவு உண்ண வேண்டும் என்று கூறுவார்கள். அது உண்மையும் கூட. நீங்கள் காலை எழுந்தவுடன் சிந்திக்கும் முதல் விஷயம் காலை ஆகாரத்தைப் பற்றி இருந்தால் நல்லது. இது என்ன அட்வைஸ் என்று நீங்கள் சிரிக்கலாம். ஆனால் அது எவ்வளவு உண்மை என்பதை இந்தக் கட்டுரையை வாசித்து பின்னர் புரிந்து கொள்வீர்கள்.


ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் தூங்குகிறான். அதன் பின்னர் அவன் எழும்போது அவன் உடலில் ஒரு நாள் முழுவதும் இயங்கத் தேவையான சக்தி இருக்காது. அப்போது காலை உணவை அவன் அவனது உடல்வாகு, தட்பவெப்பம், உடற்பயிற்சி எல்லாவற்றையும் பொருத்து சாப்பிடும்போது ஒருநாளைக்கான சக்தியும் உள்ளச் சுறுசுறுப்பும் கிடைக்கும். பசித்த வயிறுடன் எந்த ஒரு வேலையையும் சுறுசுறுப்பாக செய்ய முடியாது என்பதால் தான் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு கொண்டுவரப்பட்டதற்குக் காரணம். காலை உணவை தவிர்க்கும்போது அந்த நாள் சோர்வு நிறைந்ததாக மாறும். அதனால் இரவில் அதிகம் சாப்பிட நேரிடும். எனவே காலை உணவை தவிர்க்காமல் இருப்பது நல்லது.


2. சிறிய அளவில் அடிக்கடி சாப்பிட்டுக் கொள்ளலாம்


சிறிய அளவில் அடிக்கடி சாப்பிடுவதால் வயிறு நிறைவாக இருக்கும். அதனால் இரவு தூங்கச் செல்லும் முன்னர் நிச்சயமாக அளவுக்கு அதிகமாக உண்ண முடியாது. சிறிய அளவில் அடிக்கடி உண்ணுதல் என்பதில் ஒரு சூட்சமம் உள்ளது. நீங்கள் ஒரு வேளை எவ்வளவு உண்பீர்களோ அதை சிறு சிறு போர்ஷனாக பிரித்துக் கொண்டு உண்ணுங்கள்.


3. நிறைய தண்ணீர் அருந்துங்கள்


தண்ணீர் அருந்துதல் உடலுக்கு பல்வேறு நன்மைகளைச் சேர்க்கும். நீங்கள் ஒரு நாளின் கடைசி வேளை உணவை உட்கொள்ளும் முன்னர் ஒன்று அல்லது இரண்டு டம்ப்ளர் தண்ணீர் அருந்திப் பாருங்கள். நீங்கள் நிச்சயமாக இரவில் அதிகம் உணவு உட்கொள்ள முடியாது.


4. உங்கள் காலை உணவில் புரதம் இருக்க வேண்டும்


உங்கள் காலை உணவில் நிச்சயமாக புரதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். புரதம் இருப்பதால் நிறைவான உணர்வத் தரும். மதியத்திலும் உணவில் பருப்பு, தானியங்கள் என ஏதேனும் புரதம் இருப்பதை உறுதி செய்யுங்கள்.


5. மெதுவாக உண்ணுவோம்
உணவை அவசர அவசரமாக உண்ணக் கூடாது. நன்றாக மென்று திண்ண வேண்டும். இதனால் மூளைக்கு நமக்கு சரியான நேரத்தில் வயிறு நிரம்பிவிட்டது என்ற சமிக்ஞையைத் தரும். அதுவே வேகமாக சாப்பிட்டால் நாம் அளவைக் கடந்து சாப்பிடுவோம்.