நெய் உடலுக்கு ஆரோக்கியமானது என்றாலும் தரமான நெய் கடைகளில் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். எனவே வீட்டில் உள்ள பாலாடையைப்பயன்படுத்தி எளிதில் நெய் தயாரிக்க முடியும்
சைவ உணவுகள் தொடங்கி பிரியாணி போன்ற அனைத்திற்கும் கூடுதல் சுவை மற்றும் நல்ல மணம் வருவதற்கு நெய் பயன்படுத்திவருகிறோம். மேலும் நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. நெய்யில் CLA – Conjugated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுப்பது முதல், தேவையற்ற கொழுப்புகள் சேர்வதையும் தடுக்கிறது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களும் நெய்யை எவ்வித அச்சமும் இன்றி பயன்படுத்தலாம். குறிப்பாக வெண்ணெயுடன் ஒப்பிடும் போது, நெய்யில் தான் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானம் அடையும் தன்மை உள்ளது.
பாலாடையை வைத்து வெண்ணெய் மற்றும் நெய் செய்யும் முறை:
முதலில் நீங்கள் 1 லிட்டர் அளவிற்கு பாலை எடுத்துக்கொள்ள வேண்டும். நுரை வரும் அளவிற்கு முதலில் நன்றாக காய்ச்சிக்கொள்ள வேண்டும். இதில் கிடைக்கும் ஆடையை நீங்கள் எடுத்து வைக்க வேண்டும்.
பின்னர் காய்ச்சி பால் சற்று ஆறியதும் பிரிட்ஜில் வைத்து விட வேண்டும். இவ்வாறு மேற்கொண்டு நீங்கள் பாலாடையை எடுக்கும் போது அதிகளவு கிடைக்கும்.
இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் அல்லது 15 நாள்களாவது பாலாடை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பாக்கிஸில் போட்டு சேகரிக்க வேண்டும்.
நமக்குத் தேவையான அளவு பாலாடை கிடைத்ததும், அதனுடன் தண்ணீர் ஊற்றி தயிர் மத்தை வைத்து கடயலாம்.
இல்லாவிடில் அனைத்து பாலாடைகளும் மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் குளிர்ந்த நீரைச் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது உங்களுக்கு வெண்ணெய் கிடைத்துவிடும். இதன் பின்னர் அதனை வெளியில் எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு வைக்க வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு முறையும் செய்து வெண்ணெயை பிரிட்ஜில் சேகரித்துவைக்க வேண்டும்.
பின்னர் கடாயில் வெண்ணெய் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். வெண்ணெய் நன்கு பிரிந்து வந்ததும் முருங்கை இலை போட்டுவிட வேண்டும்.
இப்போது உங்களுக்கு வீட்டிலேயே சுத்தமான மற்றும் ஆரோக்கியமான நெய் கிடைத்துவிட்டது. இனி இந்த வழிமுறைகளை நீங்களும் டிரை பண்ணிப்பாருங்கள்.