ஆராய்ச்சியாளர்கள் குறைந்த அளவிலான கொழுப்பையும், குறைந்த அளவிலான சோடியத்தையும் பயன்படுத்தி பாரம்பரியமான சீன உணவினை தயாரித்துள்ளனர். இப்படி தயாரிக்கப்பட்ட சீன உணவு வகைகள் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து, பசியை தூண்ட செய்கிறது. பெரியவர்களின் ரத்த அழுத்தத்தை கணிசமான அளவு குறைத்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.




இதயத்திற்கு ஆபத்து விளைவிக்கும் சோடியத்தின் அளவை 6000 மி.கி.லிருந்து பாதியாக சுமார் 3,000 மி.கி வரை குறைத்து, அதில் குறைந்த அளவிலான கொழுப்புடன் அதிக அளவில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள், பொட்டாசியம் சேர்க்கப்பட்டு இரண்டு மடங்கு அளவு வரை நார்ச்சத்துகளை  சேர்த்து சீன உணவை தயாரித்துள்ளனர். இதயத்திற்கு தீங்கான சோடியத்தின் அளவு குறைவாக இருப்பதால் இது கணிசமாக இரத்த அழுத்தத்தை குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள பீக்கிங் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் ஆராய்ச்சி பேராசிரியராக இருக்கும் யான்ஃபாங் வாங்.




உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தொகையை கொண்டு முதலிடத்தில் உள்ள சீனாவிலும் மற்ற நாடுகளை போல இதய நோய் வேகமாக அதிகரித்து வருகிறது. சீன உணவுகளில் பயன்படுத்தப்படும் ஆரோக்கியமற்ற உணவு மாற்றங்கள் தான் அதற்கு முக்கியமான காரணம்.

2012ம் ஆண்டில் நடத்தப்பட்ட  சீனாவின் தேசிய ஊட்டச்சத்து ஆய்வின்படி  ஆரோக்கியத்திற்கு நன்மை உண்டாக்கும் உணவுகளை கணிசமாக குறைத்துள்ளனர் சீனர்கள்.   34% தானியங்களையும், 80% பருப்பு வகைகளையும், 15% பழங்கள் மற்றும் காய்கறிகளையும் மட்டுமே உட்கொள்கிறார்கள். ஆனால் 162% இறைச்சியையும், 132% எண்ணெய்யும், 233% முட்டையின் அளவும் சீனர்களின் உணவு முறையில் அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது.





பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ மற்றும் செங்டு ஆகிய நான்கு முக்கியமான நகரங்களில் இருந்து 265 சீனர்களை கொண்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சுமார் 56 வயதுள்ள பெரியவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை பரிசோதித்ததில் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் 130 mm Hg மேல் இருந்தது.  மேலும் ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்  பெண்கள். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குறைந்த பட்சம் ஒரு உயர் இரத்த அழுத்த மருந்தையாவது எடுத்துக் கொண்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.  

 



அவர்கள் சீன உணவுகளான ஷாங்டாங், ஹுவாயாங், கான்டோனீஸ் மற்றும் செச்சுவான் ஆகிய உணவுகளை எடுத்துக்கொள்பவர்கள் என்பது தெரிய வந்தது. பாரம்பரியமாக சீனர்களின் உணவுகளில் உப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வடக்கு சீனாவில் குளிர் காலங்களில் காய்கறிகள் தட்டுப்பாடு இருக்கும். உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை பயன்படுத்துவதால்தான் அவர்களின் சோடியம் அளவு அதிகமாக உள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.