தேவையான பொருட்கள் 

கடலை மாவு - கால் கப்

கோதுமை மாவு -1 கப்

கேழ்வரகு மாவு -1 கப் 

உப்பு - தேவையான அளவு 

சுடு தண்ணீர் - தேவையான அளவு 

செய்முறை 

முதலில் கேழ்வரகு மாவையும், கடலை மாவையும் தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ( லேசாக வறுத்தால் போதும் மாவு தீய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.) 

பின் கோதுமை மாவை ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் இந்த 3 மாவையும் ஒன்றாக சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுடு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவை விட சற்று இளகிய பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

இதை 15 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். பின் இதனுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து மாவை இடியாப்பம் அச்சில் வைக்க வேண்டும். 

இட்லி தட்டில் எண்ணெய் தடவிக் கொண்டு, இப்போது ஒவ்வொறு தட்டிலும் இடியாப்பம் பிழிந்து விட வேண்டும். இதை 3 முதல் 5 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

அவ்வளவுதான் ஆரோக்கியமான கேழ்வரகு இடியாப்பம் தயார். 

கேழ்வரகின் பயன்கள் 

கேழ்வரகில் “புரதம், நார்ச்சத்து, மக்னிசியம் போன்ற சத்துகள் உள்ளன. இது உடலுக்கு அதிக உற்சாகத்தை தர உதவும். 

உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாக உணவில் நார்ச்சத்து அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே கேழ்வரகை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது செரிமான உறுப்புக்கு நல்லது என சொல்லப்படுகின்றது. 

உ பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து அவசியமாகும். கேழ்வரகில் நிறைந்துள்ள கால்சியம் சத்து நம் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. 

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டியது அவசியம். கேழ்வரகில் செய்த உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களின் உடல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் என சொல்லப்படுகிறது. 

கேழ்வரகில் செய்த உணவுப் பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு உடலில் “மிதியோனின், லைசின்” போன்ற வேதி பொருட்கள் அதிகம் உற்பத்தியாகி தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து தோல் பளபளப்பு பெறும் என்று கூறப்படுகிறது.