தஞ்சாவூர்: வந்துக்கிட்டே இருக்கு விநாயகர் சதுர்த்தி. கொழுக்கட்டை செய்யும்மா என்று குழந்தைகள் கேட்டுக்கிட்டே இருக்காங்களா? எப்போதும் செய்யற பருப்பு, தேங்காய் பூரணம் வைக்காம சூப்பராக சத்து நிறைந்த சுவையான பச்சை பட்டாணி பூரணம் செய்யலாம் வாங்க.




 
தேவையான பொருட்கள்: அரிசி மாவு-1கப், தண்ணீர்-தேவையான அளவு, ஏலக்காய்-சிறிதளவு, நெய், உப்பு- சிறிதளவு, மசித்த பச்சைப்பட்டாணி-ஒன்றரை கப், துருவிய வெல்லம்-அரை கப் (வெல்லத்தை துருவினால் இன்னும் சுவையாக இருக்கும்) கசகசா, முந்திரி, ஜாதிக்காய்- சிறிதளவு.




செய்முறை: தண்ணீரைக் கொதிக்க வைத்து உப்பு போடுங்கள். பின்னர் அதில் அரிசி மாவைப் போட்டு கிளறி மிருதுவான பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கி சிறிது ஆறியதும் நெய் சேர்த்துப் பிசைந்து தனியாக மூடி வைக்கவும்.




அதே போல் அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து அதில் மசித்த பட்டாணி, வெல்லம் மற்றும் ஏலக்காய், ஜாதிக்காய் தூள், கசகசா, முந்திரி இவற்றைப் போட்டுக் கிளறி ஓரளவு கெட்டியான பதத்தில் ரெடி செய்து கொள்ளுங்கள். 




தொடர்ந்து கொழுக்கட்டை அச்சில் நெய் தடவி அதில் கொழுக்கட்டை மாவைத் வைத்து அதனுள்ளே பச்சைப்பட்டாணி இனிப்பு பூரணத்தை நிரப்பி அழுத்தி எடுத்தால் அருமையான கொழுக்கட்டை தயார். இதை இட்லிப் பாத்திரத்திலோ அல்லது ஸ்டீமரிலோ வைத்து 10 நிமிடம் வேக வைத்து  ஒவ்வொன்றாக எடுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். அருமையான சத்துக்கள் நிறைந்த புதிய சுவையில் கொழுக்கட்டை தயார்.