தீபாவளி கொண்டாட்டங்களில் துணிமணிகள், இனிப்புகள் ஆகியவை தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது. மேலும் உறவினர் வீடுகளுக்கு செல்கையில், அவர்களுக்கான இனிப்புகள் அல்லது துணிமணிகள் என பரிசுப் பொருட்களை நாம் கொடுக்க வேண்டி இருக்கும். மேற்கண்ட இரண்டு விஷயங்களையும் நம்மால் தவிர்க்கவே முடியாது.


இதை போலவே குழந்தைகளுக்கு பட்டாசுகள் வாங்கும் செலவுகளையும் நம்மால் தவிர்க்க முடியாது. ஆனாலும், தேவையில்லாத வீண் செலவுகள் மற்றும் தேவையில்லாத ஆடம்பரங்களில் சிக்கிக்கொண்டு, தீபாவளி மற்றும் இது போன்ற பண்டிகைகள் கடந்த பின்,குடும்ப தலைவர்கள் ஆகப்பெரிய நிதி சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்.


இதையெல்லாம் தவிர்ப்பதற்கு, முன்கூட்டியே திட்டமிடுவது, தேவையான செலவுகள் மட்டுமே செய்வது, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது போன்ற விஷயங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். இதனால் அனாவசிய செலவுகளை தவிர்த்து, நமது பணம் சேமிப்பாக நம்மிடமே இருக்கும்


முன்கூட்டியே திட்டமிடுவது:


இந்த வருடம் தீபாவளிக்கு, நகைகள் மற்றும் துணிகள்  வாங்குகிறீர்கள் என்றால், முன்கூட்டியே திட்டமிட்டு நிதானமாகவும், பொறுமையுடனும்  வாங்குங்கள். இதனால் கடைசி நேரத்தில் சென்று, இத்தகைய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருப்பதைத் தவிர்க்கலாம். ஆகவே நகைகள் மற்றும் ஆடைகள் என்றால், தீபாவளிக்கு ஒரு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு நீங்கள் வாங்கும்போது, கடைசி நேர அலைச்சல் மற்றும் அதிக விலை கொடுத்து வாங்குவதை  தவிர்க்கலாம்.


தேவையான செலவுகளை மட்டும் செய்யுங்கள்:


இன்றைக்கு ஷாப்பிங் மாலில் வாங்குவது என்ற கலாச்சாரம் நாடு முழுவதும் பரவி இருக்கிறது. இதனால் நாம் எந்தெந்த பொருட்களை வாங்க வேண்டும் என்று திட்டமிடுகிறோமோ, அந்தப் பொருட்கள் மட்டுமல்லாமல், கண்ணில் படுகின்ற, நம்மை கவர்ந்து இழுக்கக்கூடிய பொருட்களை எல்லாம் வாங்கி குவிக்கின்றோம்.
இதை தவிர்ப்பதற்கு,உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டு, வாங்க வேண்டிய பொருட்கள் மற்றும் அதற்கு நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் பட்ஜெட் என, இரண்டை மட்டுமே கவனத்தில் வைத்து, தேவையான பொருட்களை மட்டும் வாங்குவது சிறப்பானது. இதனால் உங்கள் பணமானது விரயமாகாமல், உங்களிடமே பாதுகாப்பாக இருக்கும்.


ஆன்லைனில் வாங்கும் போது கவனம்


இப்போதெல்லாம் நேரடியாக பொருட்களை வாங்குவது போன்று, ஆன்லைனிலும் வாங்கிக் கொண்டிருக்கிறோம். இதனால் அலைச்சல், நேரம் மற்றும் எரிபொருள் செலவு என நிறைய நன்மைகள் இருக்கின்றன. இதிலும் தரம் இல்லாத பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கக்கூடிய சூழல் இருக்கிறது.எனவே அதில் கவனமாக இருங்கள்.நன்றாக தேர்வு செய்யப்பட்ட தளங்களில் மட்டுமே வாங்குங்கள்.மேலும் முன்பின் தெரியாத தளங்களில் பொருட்களை வாங்கும் போது, நீங்கள் பணம் செலுத்த உள்ளிடும் உங்கள்,வங்கி விவரங்கள்,திருடப்படுவதற்கு, வாய்ப்புகள் அதிகம். 


மேலும் விலை குறைப்பு, ஃப்ரீ டோர் டெலிவரி என நிறைய ஆபர்களை காணும் சமயத்தில், பொருளின் தரத்தை ஒன்றுக்கு இரண்டு முறை, சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு அந்த பொருள் ஆன்லைன் தளத்தில், நீங்கள் ஆர்டர் செய்த போது இருந்த தரத்தில் இல்லை என்றால், திரும்பி அனுப்பும் படியாக விதிமுறைகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் இத்தகைய பொருட்களை வாங்காமல் நமது பணத்தை மிச்சப்படுத்தலாம்.


தள்ளுபடிகள் மற்றும் ஆஃபர்களை கவனமாக கையாளுங்கள்:


ஸ்டாக் க்ளியரன்ஸ் சேல்களுக்கும், தள்ளுபடிகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்ஸ் என்பது, புதுவிதமான பொருட்கள் வந்துவிட்டாலோ அல்லது பழைய பொருட்கள் நீண்ட நாள் விற்பனையாகாமல் இருந்தாலும், ஸ்டாக் கிளியர் சேல்ஸ் என்று போடுவார்கள். அதை நன்றாக யோசித்து கவனமாக வாங்கும் போது, அதில் நமக்கு நன்மைகள் கிடைக்கும்.


இதுவே, இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பொருளுக்கு தள்ளுபடி என்று வரும்போது,அதில் கவனமாக இருங்கள்.ஏனெனில் உங்களுக்கு பொருளின் விலையை விட, குறைவாக கொடுப்பதில், கடைக்காரர்களுக்கு அல்லது ஆன்லைனில் இருக்கும் தளங்களுக்கோ, எந்த விதமான நன்மைகளும் கிடையாது.ஆகவே தள்ளுபடி மற்றும் ஆஃபர்களில் மிக கவனமாக இருங்கள்.


கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள்:


கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது, அதிக புள்ளிகள், அதிக லாபங்கள் இருப்பதைப் போன்று தோன்றினாலும், மாதந்தோறும் இஎம்ஐ கட்டுவது மற்றும் இஎம்ஐ கட்டும் தேதியை  தவறவிட்டால், அதற்கு அபராதம் விதிப்பது என, தேவையில்லாத செலவுகள் நிறைய இருக்கும். ஆகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது, ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக யோசிங்கள். அதேபோலவே சில ஆன்லைன் தளங்களில் பொருட்களை இப்போது வாங்கிவிட்டு,பொறுமையாக செலுத்துங்கள் என்பதை போன்ற விளம்பரங்கள் வரும். இது நம் ஆசையை தூண்டி,நம்மை மாதம், மாதம் கடன் செலுத்தும் படியான ஒரு நெருக்கடியில் சிக்கிவிடும்.


இதைப்போலவே நிறைய துணிகளை வாங்குவதைத் தவிர்த்து, ஒன்றிரண்டு துணிகளோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இதற்கு பதிலாக சிறிய தொகையாக இருந்தாலும் கூட, தங்க மற்றும் வெள்ளி நகைகளை வாங்குங்கள். ஏனென்றால் நகைகளுக்கு நீங்கள் செலவழிக்கும் தொகையானது முதலீடாகவே இருக்கும்.


மேற்சொன்ன விஷயங்கள் கடைப்பிடிப்பதன் மூலம்,உங்கள் செலவுகளை கட்டுப்படுத்துவதுடன், அதை சேமிப்பாகவும் மாற்றிக் கொள்ள முடியும்.