அக்குள் கருமை

 

உடலில் மடிப்புகள் அதிகம் உள்ள இடங்கள் அனைத்துமே கருமையாக இருக்கும். அப்படி கருப்பாக இருக்கும் ஒரு இடம் தான் அக்குள். அக்குள் கருப்பாக உள்ளது என்று பெண்களும், ஆண்களும் அதிக அளவில் வருத்தப்படுவார்கள். இதற்கு காரணம், அக்குள் கருப்பாக இருந்தால் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிய முடியாது என்பது. அதனை போக்குவதற்கான சில டிப்ஸ்கள்...

 

உருளைக்கிழங்கு

 

உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. மேலும் இதனை பயன்படுத்தினால், சருமத்தில் எந்த ஒரு பக்க விளையும் ஏற்படாது. ஏனெனில் இதில் அமிலமானது அளவாக உள்ளது.

 

ஆகவே உருளைக்கிழங்கை வெட்டி, அதனைக் கொண்டு அக்குளை 5-10 நிமிடம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், கருமையானது விரைவில் நீங்கும்.

 



 

எலுமிச்சை

 

உருளைக்கிழங்கை விட, எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அது சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். அதிலும் இதனை எப்போதும் தனியாக பயன்படுத்தக்கூடாது. மாறாக ஏதேனும் ஒரு பொருளுடன் சேர்த்து தான் பயன்படுத்த வேண்டும். அதிலும் தினமும் குளிக்கும் முன், எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதனை பஞ்சில் நனைத்து, அக்குளை தேய்த்து, 5 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். மேலும் குளித்து முடித்த பின்னர், ஏதேனும் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.

 



 

தயிர்

 

தயிர், மஞ்சள் தூள், தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

 

பேக்கிங் சோடா

 

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவி, உலர வைக்க வேண்டும். இந்த முறையினாலும் அக்குள் கருமையைப் போக்கலாம்.

 



 

வெள்ளரிக்காய்

 

வெள்ளரிக்காயிலும் உருளைக்கிழங்கில் உள்ளது போன்ற ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அதுமட்டுமின்றி, சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும். அத்தகைய வெள்ளரிக்காயை தினமும் வெட்டி, அக்குளில் தடவி உலர வைக்க வேண்டும் அல்லது வெள்ளரிக்காய் சாற்றில், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதனை அக்குளில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

 



 

ஆரஞ்சு தோல்

 

எலுமிச்சையைப் போன்றே ஆரஞ்சிற்கும் கருமையைப் போக்கும் சக்தி உள்ளது. அதற்கு ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, அத்துடன் பால் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.