மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சாயாத்ரி மலைகள், அழகான மலர்கள், அடர்ந்த வனப் பகுதிகள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ள இகத்புரிக்கு சுற்றுலா சென்றால் பயணம் செல்ல வேண்டிய பல்வேறு அழகான இடங்கள் இருக்கின்றன. மகாராஷ்ட்ரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்திலுள்ள இகத்புரி வெறும் அழகான பகுதியாக இருப்பது மட்டுமின்றி, வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் முக்கியமான தலமாகக் கருதப்படுகிறது. 


இந்தக் கோடை விடுமுறையில் இகத்புரியில் நீங்கள் சுற்றிப் பார்க்க வேண்டிய ஐந்து இடங்களைப் பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம்... 


1. கல்சுபாய் சிகரம்



சுமார் 1646 மீட்டர்கள் உயரமான கல்சுபாய் சிகரம் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மிகவும் உயரமான மலை ஆகும். இயற்கை ஆர்வலர்களுக்கும், ட்ரெக்கிங் விரும்புவோருக்கும் மிகவும் பிடித்த அட்வெஞ்சர் இடமாக இகத்புரி அமைந்துள்ளது. மழையில் நனைந்தபடி இயற்கையை ரசிக்க விரும்புவோருக்கு இந்த இடம் பிடித்தமானதாக அமையும். மேலும், கல்சுபாய் சிகரத்தில் இருந்து பந்தர்தராவின் பெரிய மலைகளைப் பார்வையிடலாம். 


2. திரிங்கல்வாடி கோட்டை



கடல் பரப்பில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடிகள் உயரத்தில் இருக்கும் திரிங்கல்வாடி கோட்டை கடந்த பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது அமைந்திருக்கும் இடத்தில் இருந்து கொங்கன், நாசிக் வழித்தடங்களைப் பார்க்க முடியும். குலாங் மலைகள், கல்சுபாய் சிகரம் ஆகியவற்றை இந்தக் கோட்டையில் இருந்து பார்வையிட ட்ரெக்கிங் பிரியர்கள் இங்கே குவிவது வழக்கம். 


3. விபாசனா தியான மையம்



இகத்புரியில் உள்ள விபாசனா தியான மையம் உலகப் புகழ் பெற்றது. எஸ்.என்.கோயென்காவால் நிறுவப்பட்ட இந்தத் தியான மையம் பல்வேறு பாடங்களையும், பௌத்த மரவுகளையும் கற்றுத் தருகிறது. இங்குள்ள பெரியளவிலான தங்க நிற கோபுரம் இகத்புரியின் சின்னமாக விளங்குகிறது. 


4. ஒட்டகப் பள்ளத்தாக்கு



பட்சா ஆற்றுப் பள்ளத்தாக்கிற்குச் சில கிலோமீட்டர்கள் முன்பு அமைந்துள்ள இந்த இடம் அதன் நீர்வீழ்ச்சிகளுக்காகவும், இயற்கை அழகிற்காகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள மலைப் பாறை ஒன்று ஒட்டகத்தின் தலை போலவே இருப்பதால் இப்பகுதிக்கு இந்தப் பெயர் கிடைத்துள்ளது. மேலும், பட்சா ஆற்றின் பள்ளத்தாக்கிற்கு மிக அருகில் இந்தப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மைய இடத்தில் இருந்து அதன் முழு அழகையும் ரசிக்கலாம். 


5. அம்ருதேஷ்வரர் கோயில்



இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் பண்டைய கால சிவன் கோயில் இது. மேலும், சமய நம்பிக்கை கொண்ட பலருக்கும் இந்தக் கோயில் பிரசித்தி பெற்றது. கடந்த ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது. ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ள இந்தக் கோயில் கட்டி முடிப்பதற்காக பல்வேறு கருங்கற்களும், செங்கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.