கண்கள் ஆரோக்கியம் மிகவும் அவசியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது மருத்துவ உலகம். அதுவும் டிஜிட்டல் உலகில் கேஜெட்களின் பயன்பாட்டின் அதிகரிப்பால் கண்களின் ஆரோக்கியத்தினை உறுதிப்படுத்துவது என்பது மிகவும் சவாலான ஒன்று. ஊட்டச்சத்துமிக்க உணவுகளை சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ்களை இக்கட்டுரையில் காணலாம்.


சரியான ஊட்டச்சத்து:


சத்துகளுக்கு சாப்பிடாமல் வயிற்றை நிரப்ப சாப்பிடுவதும், துரித உணவுகள் போன்ற ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பதுமே இன்றைய தலைமுறை வெகுவிரைவாக கண்பார்வை தொடர்பான பிரச்னைக்கு உள்ளாகின்றனர் என்கிறனர் மருத்துவர்கள்.  உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு குறிப்பிட்ட சத்து தேவைப்படுகிறது. அதுபோலத்தான் கண்ணுக்கும் அனைத்துவிதமான சத்துக்களும் முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் ஈ ஆகிய சத்துகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.


கேரட், பப்பாளி, தக்காளி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நெல்லிக்காய், எலுமிச்சை, ஜாதிக்காய், வெள்ளரிக்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகள் முக்கியம் இடம் பெற வேண்டும். மற்ற பச்சை காய்கறிகளும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுபோக, பசலைக்கீரை உள்ளிட்ட கீரை வகைகள் கண் பார்வையை சீராக வைத்திருக்கின்றன. செறிவூட்டப்பட்ட தானிய வகைகள், சிறிய மீன்கள் போன்ற கடல் உணவுகள், பெர்ரி, கொய்யா, ஆரஞ்சு, கிவி போன்ற பழ வகைகளும் கண் பார்வைக்கு முக்கியமானதாகும்.


பச்சை காய்கறிகள்:


கீரை வகைகள் உள்ளிட்டவைகளில்  lutein  zeaxanthin ஆகிய இரண்டு ஆன்டி-ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இது ப்ளூரே ஒளியினால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க பயன்படுகிறது. அதோடு, தொடர்ந்து உணவில் கீரைகள் சேர்த்து கொள்வது நல்லது.  


பெர்ரீஸ்


ப்ளூ பெர்ரீஸ், ராஸ் பெர்ரீஸ், ஸ்ட்ராப்பெர்ரீஸ் ஆகியவற்றில் 'flavonoids’ என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை அளிக்கக்கூடியது. 


சிட்ரஸ் பழங்கள்


ஆரஞ்சு, எலுமிச்சை, க்ரேப்ஃப்ரூட் உள்ளிட்டவைகளில் வைட்டமின் சி அதிகமிருப்பதால் வயதாவதால் ஏற்படும் கண் பார்வை குறைப்பாடுகளை தவிர்க்க உதவும். 


நட்ஸ் வகைகள்


உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா, வால்நட், பிஸ்தா, சூரியகாந்தி விதைகள்,  உள்ளிட்டவற்றில் வைட்டமின் ஈ சத்து மிகுந்திருப்பதால் கண்களின் ஆரொக்கியத்திற்கு நல்லது. 


மீன் 


சாலமன், ட்யூனா உள்ளிட்ட மீன் வகைகளில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான முழு ஊட்டச்சத்துகள் இருக்கிறது. வாரத்தில் மூன்று முறை ஒமெகா- 3 சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொளவது கண்களில் உள்ள நீர்சத்து வறட்சி ஏற்படாமல் இருப்பதற்கு உதவும் என்று ஆய்வுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.


கண்ண சிமிட்டுங்க:


கண் சிமிட்டுதல் என்பது ஏதோ தேவையற்ற செயல்பாடு அல்ல. இயற்கையாகவே கண்ணுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு பயிற்சி. சரியான இடைவெளியில் நாம் கண் சிமிட்டும் போது நம் கண்களுக்கு தேவையான சில ஊட்டச்சத்துகள் கிடைக்கப்பெறுகின்றன. அதனால் கண் சிமிட்டுதலை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். 


வெள்ளரிக்காய் ட்ரிக்:


அழகு நிலையங்களுக்கு சென்றால் வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி மூடிய கண்களுக்கு மேல் வைத்திருப்பார்கள். அதுவும் கண்களுக்கான ஒரு தேவை தான். வெள்ளரிக்காய் உண்பது மட்டுமல்ல வெள்ளரிக்காயை கண்களுக்கு மேல் வைப்பதும் நல்லதைத் தரும்.


நன்கு கழுவிய குளிர்ச்சியான வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி 10 நிமிடங்கள் கண்களுக்கு மேல் வைத்தால் கண்கள் குளிர்ச்சியாகும். கண்களில் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வழிதல் போன்ற பிரச்னைகளுக்கு வெள்ளரிக்காய் ட்ரிக் நல்லது. நீண்ட நேரம் கம்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள், செல்போன் பயன்படுத்துபவர்கள் வெள்ளரிக்காய் ட்ரிக்கை அடிக்கடி செய்வது நல்லது.


20-20-20 பயிற்சி:


உங்கள் வேலை கம்யூட்டரில் என்றால் 20-20-20 பயிற்சி மிக முக்கியம். நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துபவர்களும், வீடியோ கேம் ஆடுபவர்களுக்கும் இந்த பயிற்சி  தவிர்க்கக்கூடாதது. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை 20 நொடிகள் கூர்ந்து பார்க்க வேண்டும். இந்த பயிற்சி உங்கள் கண்களுக்கு ஓய்வு அளித்து புத்துணர்ச்சி பெற வைக்கிறது. மறந்துடாதீங்க.


தூக்கம்:


தூக்கம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமே ஓய்வு தான். தூக்கம் என்றால் பகலிலோ அல்லது நடு இரவில் தூங்குவதோ இல்லை. சரியான நேரத்தில் படுத்து சரியான நேரத்தில் எழும்  தூக்கம் வேண்டும். ஒரு ஆழ்ந்த நல்ல தூக்கம் கண்களுக்கு முழு ஓய்வை அளித்து புத்துணர்ச்சி அளிக்கிறது. அடுத்த நாளை சிறப்பாக தொடங்க நல்ல தூக்கம் கைகொடுக்கிறது.