சர்க்கரை நோய் உடல்நலனில் உண்டாக்கும் பாதிப்புகளைத் தாண்டி, ஒருவரது சருமத்திலும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 


அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகம், சோர்வு, பசி ஆகியவை நீரிழிவு நோயின் சில பொதுவான அறிகுறிகளாகும். ஆனால், ஒருவரது சருமத்தில் ஏற்படும் பின்வரும் பாதிப்புகளும் நீரிழிவு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். இது குறித்து ​​தோல் மருத்துவர் ரிங்கி கபூர் தெரிவித்துள்ளவற்றை பார்க்கலாம்.


தடிப்புகள்


தோலில் அரிப்பு கொப்புளங்களை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சைத் தொற்றானது, நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகவும் இருக்கலாம்.


கை, கால்விரல்களுக்கு இடையில் உள்ள தசை, நகங்கள், மார்பகங்களின் கீழ் உள்ளிட்ட பகுதிகளில் இந்தத் தொற்று ஏற்படலாம்.


அரிப்பு


நீரிழிவு நோயாளிகளை பாதிக்கும் பொதுவான தோல் பிரச்சனையாக அரிப்பு உள்ளது. மருத்துவர்களின் கூற்றுப்படி வறண்ட சருமம், மோசமான ரத்த ஓட்டம் மற்றும் நோய்த்தொற்றுகள் காரணமாக நீரிழிவு நோயாளிகளிடம் அரிப்பு ஏற்படுகிறது.


கருமையான தோல்


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கழுத்து, இடுப்பு, கைகள், முழங்கைகள், உள்ளிட்ட பகுதிகளில் கருமையான சருமத்தை உண்டாக்கக்கூடிய அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் என்ற பிரச்சினை உருவாக வாய்ப்புள்ளது. டாக்டர் ரிங்கி கபூர் கருத்துப்படி, கருமையான தடிமனான தோல் பகுதிகள் நீரிழிவு நோய் எச்சரிக்கையின் முதல் அறிகுறிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.


சொரியாசிஸ்


தோலில் அரிப்பு, செதில்கள் மற்றும் நிறமாற்றத் திட்டுகளை உருவாக்கும் சொரியாசிஸ், டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.


நீரிழிவு கொப்புளங்கள்


இந்தக் கொப்புளங்கள் முக்கியமாக கை, கால் விரல்கள், கால்கள் உள்ளிட்ட இடங்களில் வளரும் அரிதான நிலையாகும். அவை இயற்கையாகவே குணமாகும் என்று கூறப்படுகிறது.


வெடிப்பு சாந்தோமாடோசிஸ் (Xanthomatosis)


டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆபத்தில் உள்ளனர். இதன் விளைவாக தோலில் மஞ்சள், வட்ட வடிவ புடைப்புகள் உருவாகலாம். நீரிழிவு கட்டுப்பாடற்ற அளவில் இருக்கும்போது இது ஏற்படுகிறது.


டிஜிட்டல் ஸ்க்ளெரோசிஸ்


கைகளின் பின்பகுதியில் தடித்த, மெழுகு போன்ற தோல் உருவாவது டிஜிட்டல் ஸ்க்ளெரோசிஸ். இதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் போனால், பாதிக்கப்பட்ட பகுதி கடினமானதாக மாறி, உடல் இயக்கத்துக்கே பிரச்னையாகும்.


நீரிழிவு புண்கள்


தோல் பகுதிகளில் தோன்றும் இந்தக் காயங்கள் நிரந்தர சேதத்தையும் ஏற்படுத்தலாம். கவனிக்கப்படாமல் விட்டால் பாதிக்கப்பட்ட உறுப்புகளைத் துண்டிக்க வேண்டிய நிலைக்கும் எடுத்துச் செல்லலாம்.