நடிகர் உதயநிதி ஸ்டாலினின்  பழைய ட்விட்டர் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அது ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. 


கலைஞர் கருணாநிதியின் பேரன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ., நடிகர், தயாரிப்பாளர் என பெருமைகளை கொண்ட உதயநிதி ஸ்டாலின் கடந்த 2009 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் படத்தின் கேமியோ ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவானார். 






தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வரும் நவம்பர் 18 ஆம் தேதி உதயநிதி நடிப்பில் கலகத்தலைவன் படம் வெளியாகவுள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக நடிகை நிதி அகர்வாலும், முக்கிய வேடங்களில் ஆரவ், கலையரசன் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி  இசையமைத்துள்ளனர். 


உதயநிதி கிருத்திகாவை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சிவா நடித்த வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநரான கிருத்திகா, அதனைத் தொடர்ந்து காளி, ஓடிடி தளத்திற்காக பேப்பர் ராக்கெட் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியர்களுள் ஒருவராக உள்ள உதயநிதி - கிருத்திகாவின் பழைய ட்விட்டர் கருத்துகள் இணையத்தில் வருகிறது. 


அதன்படி 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், உங்களிடமிருந்து வரும் நல்ல கேள்விகளுக்கு அடுத்த 15 நிமிடத்திற்கு பதிலளிக்க போகிறேன் என தெரிவிக்கிறார். அதில் கிருத்திகா இரவு என்ன சாப்பாடு செய்ய வேண்டும் என கேட்கிறார். அதற்கு உதயநிதி கேள்வி கடினமாக உள்ளது. ஏதேனும் ஆப்ஷன் இருக்கிறதா என கேள்வியெழுப்புகிறார். உடனே கிருத்திகா சாய்ஸ் கொடுக்கலாம் என சொல்லிவிட்டு A) தோசை B) தோசை C) தோசை D) தோசை  என தெரிவித்துள்ளார். 






இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலான நிலையில் அதனை குறிப்பிட்டு இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும் இதே நிலை தான் என நக்கலாக பதிவு செய்துள்ளார்.