இந்திய சமையலில் உணவுக்கு ருசியை வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பவை மசாலா. மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் பல்வேறு சமையல் முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒவ்வொன்றிற்கும் சுவை மாறுபடும். மசாலா இல்லையென்றால் உணவின் ருசி மாறுபடும். மசாலா நறுமணம், சுவை தருவதுடன் அதில் மருத்துவ குணங்களும் இருப்பதாக் ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.  மசாலா பொருட்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியவைகளாக சிலவற்றை இங்கே காணலாம். 


சந்தையில் ஏராளமான மசாலா பொருட்கள் கிடைக்கின்றன. உங்கள் சமையலுக்கு ஏற்றவாறு அவற்றை தேர்வு செய்ய வேண்டும். முதன்முறையாக சமையலுக்காக கிச்சன் செட் செய்கிறீர்கள் என்றால் மசாலா பொருட்களை எப்படி பார்த்து வாங்க வேண்டும், சேமிக்க வைக்க வேண்டும் ஆகியவற்றிற்கு டிப்களை காணலாம். 


மசாலா பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு செல்வதற்கு முன்பு என்னென்ன வேண்டும் என்பதை லிஸ்ட் செய்யவும். அதோடு, மசாலா பொருட்கள் பற்றி அடிப்படையான விசயங்களை தெரிந்துகொள்ளவும். அதன், சுவை, நிறம், மணம் ஆகியவற்றை தெரிந்து அது உணவோடு சேர்க்கும்போது என்ன சுவை தரும்; எந்த உணவுக்காக உங்களுக்கு மசாலா வேண்டும் உள்ளிட்டவற்றை தெரிந்துகொண்டு கடைக்குச் செல்லவும்.


அவரச வாழ்க்கை சூழல் காரணமாக பல்வேறு சமையல் பொருட்கள் இப்போது ரெடிட்-டு - குக் என்ற ஆப்சனிலேயே கிடைக்கிறது. இருப்பினும் மசாலா பொருட்களை வாங்கி அதை நீங்களே பொடியாக தயாரிப்பதே நல்லது. உதாரணமாக, மல்லி, மிளகாய் உள்ளிட்டவற்றை வாங்கி வெயிலில் காயவைத்து பொடியாக அரைத்து காற்று புகாத, ஈரப்பதம் இல்லாத டப்பாவில் சேமித்து வைக்கவும். அதன் தரம் மாறாமல் இருக்கும். கடைகளில் கிடைக்கும் பொடி வகைகளில் நீண்டநாள் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனம் சேர்க்கலாம். 


மசாலா பொருட்களின் நிறங்களை கவனிக்க வேண்டும். மிளகு, மிளகாய் உள்ளிட்டவை இயல்பான நிறத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காய வைக்கப்பட்ட பொருட்களான சோம்பு, சீரகம், மிளகு எல்லாம் பிரவுன் நிறத்தில் இருக்க கூடாது. பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். 


சந்தைகளில் முதலாம், இரண்டாம் ரக தரத்தில் மசாலா பொருட்கள் கிடைக்கும். அவற்றில் முதலாம் தரத்தில் கிடைப்பதை வாங்கி வைப்பது நல்லது. சில்லறை வணிகர்களிடம் தரமான பொருட்களாக கிடைக்கும் அவற்றை பயன்படுத்தலாம். சீரகம், மிளகு, மிளகாய் உள்ளிட்டவை சில சீசனில் குறைந்த விலையில் கிடைக்கும். எப்போதும் கிடைப்பதைவிட குறைவான விலையில் கிடைக்கும். அப்போது ஆண்டு முழுவதும் பயன்படுத்த வாங்கி வைத்து கொள்ளலாம். எல்லா மசாலா பொருட்களையும் அதிக அளவு வாங்கிவிட கூடாது. சில மசாலா பொருட்கள் மட்டுமே நீண்ட நாட்களுக்கு நறுமணத்துடன் இருக்கும். அதனால், அதிகமாக வாங்குவதை தவிர்க்கவும். ஏலக்காய் உள்ளிட்டவற்றை அளவோடு வாங்கி சேமிக்கலாம். 


மசாலா பொருட்களை காற்று புகாத டப்பாக்களில் சேமிக்க வேண்டும். அதிகம் வெப்பம் உள்ள இடங்களிலும் வைக்க கூடாது. ஈரப்பதம் இல்லாமல் இருந்தால் மசாலா கெடாமல் இருக்கும். 


இவற்றை வாங்கும்போது கலப்படம் உள்ளதா என்பதை கவனித்தும் வாங்க வேண்டும். அந்தப் பொருட்களின் நிறம், தரம் ஆகியவற்றை வைத்து கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறியலாம். 


இந்தியாவில் கலப்பட தடைச்சட்டம் 1954ம் ஆண்டு அமலாக்கப்பட்டது. இதினுள்ள பிரிவு 12ன் படி நுகர்வோர், கலப்படம் உள்ளது என சந்தேகிக்கும் பொருளை மாதிரி எடுத்து வெளிப்படையாகவே ஆய்வகத்திற்கு அனுப்பலாம். குறைந்தது இரு நபர்கள் சாட்சியம் வேண்டும். இச்சத்திலுள்ள பிரிவு 20ன் படி நுகர்வோர் வழக்குத் தொடரவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலப்படம் நிரூபிக்கப்பட்டால் நுகர்வோர் அனுப்பும் மாதிரிக்கான கட்டணத் தொகை ரூ.50-ஐ திரும்பப் பெறும் வசதி உள்ளது. மேலும் குற்றவாளிக்கு ஆறுமாதம் சிறை முதல் ஆயுள் தண்டனை வரையிலும் ரூ.1000 - 5000 வரை அபராதமும் விதிக்கப்படும்.