தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிப்பது குறித்துத் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:


“மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி நிலவரப்படி காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய தகவலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாவட்ட ஆட்சியர்கள், காலிப் பணியிடங்கள் குறித்த தகவலை அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.


நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


இந்த காலிப் பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி எந்தவித விதி மீறலும் இல்லாமல் கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 7ஆம் தேதி வரை பெற வேண்டும். 


பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14-ம் தேதி பரிசீலித்து, முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19-ம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். மேலும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் 19-ம் தேதி வெளியிட்டு அன்றே பணி ஆணைகளை வழங்க வேண்டும்.


தேர்வு எப்படி?


இதற்கான எழுத்துத் திறன் தேர்வைக் கண்காணிக்க தாலுகா அளவில் துணை மாவட்ட ஆட்சியரை, கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். கிராமத்தைப் பற்றிய விவரங்கள், நில வகைப்பாடுகள், கிராம கணக்குகள் அல்லது மாவட்ட ஆட்சியர் கூறும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுதச் செய்யலாம். 


வாசிப்புத் திறனை அறிந்து கொள்வதற்காக ஏதாவது ஒரு புத்தகத்திலும் இருந்து சில வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். அதற்கான விதிகள், வழிகாட்டுதல்களை வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கையாக வழங்க வேண்டும்.”


இவ்வாறு வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கல்வித் தகுதி:


* தமிழில் படிக்கவும் எழுதவும் வேண்டும்
* 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
* குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்


ஊதியம்: 


ரூ.11,100 – ரூ.35,100/-


வயது வரம்பு:


குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்;


பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 37 வயதுக்கு மிகாமலும், மாற்றுத் திறனாளிகள் 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பு 48 வயது.