மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணிக்குச் செல்ல விரும்பும் இளைஞர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் இது ஒரு சிறப்பான வாய்ப்பாகும்.
என்னென்ன பதவிகள்?
இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசின் பல முக்கிய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள குரூப் ஏ மற்றும் குரூப் பி அளவிலான பதவிகள் நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக உதவி இயக்குநர், விஞ்ஞானி, சிறப்பு மருத்துவர்கள், மற்றும் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட பல உயர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒவ்வொரு பதவிக்கும் தேவையான கல்வித்தகுதி, முன் அனுபவம் மற்றும் வயது வரம்பு ஆகியவை மாறுபடும். எனவே, விண்ணப்பதாரர்கள் எந்தப் பதவிக்குத் தாங்கள் தகுதியானவர்கள் என்பதை முழுமையாகச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகளும் உண்டு.
தேர்வு முறை எப்படி?
இந்த நேரடி நியமனப் பணியிடங்களுக்குப் பொதுவாக எழுத்துத் தேர்வு கிடையாது. பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு, நேரடியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதன் மூலமே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருவேளை குறிப்பிட்ட பதவிகளுக்கு அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தால், தேர்வர்களை வடிகட்டுவதற்காகக் கணினி வழியிலான சுருக்கத் தேர்வு நடத்தப்பட வாய்ப்புள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியானவர்கள் upsconline.nic.in என்ற இணையதளத்திற்குச் சென்று 'Online Recruitment Application' (ORA) முறையில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 25 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவு இன்று (ஏப்ரல் 11) தொடங்கிய நிலையில், மே 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அதிலும் குறிப்பாகப் பெண்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினர் நெட்பேங்கிங் அல்லது டெபிட் கார்டு மூலமாக இந்தக் கட்டணத்தைச் செலுத்தலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி, துறை வாரியான காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள் உள்ளிட்ட முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள upsc.gov.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையைப் படித்துப் பார்க்குமாறு தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
