படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து  உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு


மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்


செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தில் 01.10.2023 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து,  வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத்  திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகிறது.


பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது


பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலாக கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து, 30.09.2023 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு,  தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.


உதவி திட்டத்தால் பயன்பெற முடியாதவர்கள் யார் யார் ?  


 பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், B.Sc. Nursing போன்ற தொழிற்பட்டப் படிப்புகள் (PROFESSIONAL DEGREE) முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.


 என்னென்ன தகுதிகள் பெற்று இருக்க வேண்டும்


இத்திட்டத்தின் கீழ் பயன் பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.  இந்த உதவித் தொகையினைப் பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.09.2023 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.


 விண்ணப்பங்களை எவ்வாறு பெறுவது ?


உதவித்தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை  இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.


விண்ணப்பங்களை எவ்வாறு சமர்ப்பிப்பது ? 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் 2023-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதிக்குள்ளாக அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டப்பிரிவில், அனைத்து அசல் கல்வி சான்றிதழ்களை, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு துவக்கி புத்தகத்துடன் நேரில் ஆஜராகி  சமர்ப்பிக்கலாம்  என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல்நாத்,   தெரிவித்துள்ளார்.