அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரைவுரையாளர் பணிக்கானத் தேர்வுத்தேதிகளை தமிழ்நாடு ஆசியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள நிலையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தேதிகளில் மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் செயல்பட்டுவருகிறது. இங்கு ஆர்வத்துடன் மாணவர்கள் பல்வேறு  தொழில்நுட்ப பிரிவுகளின் கீழ் சேர்ந்து பயின்றுவருகின்றனர். இவர்களுக்கான விரிவுரையாளர்கள் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் தேர்வுகளை நடத்தப்பட்டு பணியமர்த்தப்பட்டுவருகின்றனர். இதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியான நிலையில், செப்டம்பரில் தேர்வுகள் நடத்தப்பட்டது.  ஆனால் இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதோடு வேறொரு தேதியில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.





இதனைத்தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு  பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மீண்டும் வெளியானது. மொத்தம் 1060 பணியிடங்களுக்கான அறிவிப்பில், சிவில் – 112, மெக்கானிக்கல் -219, EEE-91, ECE – 119, ICE – 3, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் -135, IT – 6 , புரொடெக்ஷன் இன்ஜினியரிங் 6, டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் 6, பிரிண்டிங் டெக்னாலாஜி -6, ஆங்கிலம் -88, கணிதம் – 88, இயற்பியல் -83, வேதியியல் -84, மாடர்ன் ஆபீஸ் பிராக்டிஸ் (Modern Office Practice) -17 என பல்வேறுத் துறைகளுக்கான விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு பாலிடெக்னிக் விரைவுரையாளர்கள் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்ய பிப்ரவரி 2 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதோடு கொரோனா பெருந்தொற்று சமயத்தில் கணினி வழி மூலமாக மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இப்பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு தேதிகள் பின்ன்ர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.





இந்நிலையில் கொரோனா தொற்றின் 2 வது அலையின் காரணமாகத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அரசு பாலிடெக்னிக் விரையாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வு வருகின்ற அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்குத் தெரிவிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பெருந்தொற்று சூழல், தேர்வு மையங்களின் தயார் நிலை மற்றும் நிர்வாக வசதியைப் பொறுத்து தேர்வுத் தேதிகளில் மாற்றம் செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.