அரசு சட்டக்‌ கல்லூரிகளில் 132 இணைப்‌ பேராசிரியர்‌, உதவிப்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ உதவிப்‌ பேராசிரியர்‌ (சட்ட முன்‌ படிப்பு) பணி இடங்களுக்காக ஜனவரி 31ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஆர்பி அழைப்பு விடுத்துள்ளது.

காலி இடங்கள் எவ்வளவு?

இணைப் பேராசிரியர்- 8

உதவிப் பேராசிரியர் – 64

உதவிப்‌ பேராசிரியர்‌ (சட்ட முன்‌ படிப்பு)- 60

மொத்தம் – 132 காலி இடங்கள்

கல்வித் தகுதி என்ன?

சட்டத்தில் முதுகலைப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களைப் பெறலாம். எஸ்சி, எஸ்டி தேர்வர்கள் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் போதுமானது. எனினும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தனித் தேர்வராகவோ, தொலைதூரக் கல்வி முறையிலோ தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.

குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் சட்டக் கல்லூரியில் பணியாற்றி இருக்க வேண்டும்.

மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு அல்லது மாநில ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு

டிசம்பர் 21ஆம் தேதி, 2021 முதல் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு எப்போது?

ஓஎம்ஆர் அடிப்படையிலான தேர்வு மே 11ஆம் தேதி முதல் நடைபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர்‌ தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘’அரசு சட்டக்‌ கல்லூரிகளுக்கான 132 இணைப்‌ பேராசிரியர்‌, உதவிப்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ உதவிப்‌ பேராசிரியர்‌ (சட்ட முன்‌ படிப்பு) பணி இடங்களுக்கான அறிவிக்கை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளம்‌ வாயிலாக https://trb.tn.gov.in/ மூலம் வெளியிடப்பட்டு உள்ளது.

பாட வாரியான காலிப்‌ பணியிட விவரங்கள்‌, கல்வித்‌ தகுதி, வயது மற்றும்‌ விண்ணப்பம்‌ செய்வதற்கான அனைத்து விவரங்களும்‌ அறிவிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க ஏதுவாக 31.01.2025 முதல்‌ 03.03.2025 பிற்பகல்‌ 5 மணி வரை கால அவகாசம்‌ வழங்கப்பட்‌டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம்

  • பொதுப் பிரிவினருக்கு ரூ.600 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • எனினும் எஸ்சி/ எஸ்டி தேர்வர்கள் 300 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதுமானது.
  • ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த முடியும்.

தேர்வு முறை

  • கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு
  • எழுத்துத் தேர்வு
  • குழுவின் மதிப்பீடு மற்றும் மதிப்பெண் (இணைப் பேராசிரியர் பதவிக்கு மட்டும்)
  • அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://www.trb.tn.gov.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.

சரியான இ- மெயில் முகவரி, மொபைல் எண் ஆகியவை விண்ணப்பிக்க முக்கியம்.

இணைப் பேராசிரியர் பதவிக்கு 2 பாடங்களுக்கு 2 படிவங்களைக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

விரிவான விவரங்களை https://trb.tn.gov.in/admin/pdf/756485331TRB%20-%20Final%20Notification-%2024-1-2025.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து அறியலாம்.