Meta Layoff: பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் ஆண்டு ஊதியம், சுமார் ரூ.3 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.


24 பேரை பணிநீக்கம் செய்த மெட்டா:


மெட்டா நிறுவனம் புதியதாக 24 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இல்லை, இது வழக்கமாக நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை இல்லை. மாறாக, மார்க் ஜுக்கர்பெர்க்கின் நிறுவனம், லாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகங்களில், நிறுவனத்தின் உணவு வவுச்சர் முறையை தவறாகப் பயன்படுத்தியதற்காக 24 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பான அறிக்கைகளின்படி, மெட்டா ஊழியர்களுக்கு  உணவு கொடுப்பணவாக 25 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,100 மதிப்பிலான வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. அதனை சிலர் பேஸ்ட், துணி துவைக்க பயன்படும் சோப், ஸ்காட்ச் டேப், மது கண்ணாடிகள் மற்றும் வீட்டுப் பொருட்கள் உட்பட பல்வேறு உணவு அல்லாத பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்தியுள்ளனர்.


ரூ. 3 கோடி சம்பளமாம்..!


உணவுக்கான வவுச்சர்களை தவறாகப் பயன்படுத்துவதை வெளிப்படுத்திய உள் விசாரணையைத் தொடர்ந்து மெட்டா ஊழியர்களை பணிநீக்கம் அரங்கேறியுள்ளது. விசாரணையில், அலுவலக நேரத்தில் உணவுடன் சிறிதும் சம்பந்தமில்லாத பொருட்களை வாங்குவதற்கு ஊழியர்கள் உணவுக்கான வவுச்சர்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. சில தொழிலாளர்கள் அலுவலகத்தில் இல்லாதபோது தங்களது வீட்டிற்கு உணவை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. நிறுவன வளங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலர் ஆண்டுக்கு ரூ.3.3 கோடி ஊதியம் வாங்குபவர்கள் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஊழியர்கள் சொல்லும் விளக்கம் என்ன?


பணி நீக்க நடவடிக்கை தொடர்பாக, சில ஊழியர்கள் சமூக வலைதளங்களில் விளக்கமும் அளித்துள்ளனர். அதன்படி, ”நான் அலுவலகங்களில் உணவு சாப்பிடாத அல்லது எனது நண்பர்களுடன் வெளியே உணவு உட்கொள்ளும் நாட்களில், எனக்கான உணவு கூப்பன்கள் வீணாவதை நான் விரும்பவில்லை. அதற்காகவே அந்த கூப்பன் மூலம் எனது வீட்டிற்கு உணவு வாங்கியதாக” சிலர் விளக்கமளித்துள்ளனர்.  


தொடரும் பணிநீக்க நடவடிக்கைகள்:


மெட்டா நிறுவனம் தொடர்ச்சியான செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான வேலைகள் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், மெட்டா கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 21,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. ஜூன் 2023 நிலவரப்படி, நிறுவனம் தோராயமாக 70,799 நபர்களைப் பணியமர்த்தியுள்ளது. இப்போது WhatsApp மற்றும் Instagram உட்பட பல்வேறு பிரிவுகளை மறுகட்டமைப்பதில் கவனம் செலுத்துகிறது.


மெட்டாவின் ஆட்குறைப்பு நடவடிக்கை என்பது தொழில்நுட்பத் துறையில் நிலவும் ஒரு பெரிய போக்கின் அங்கமாகும். நிறுவனங்கள் பணியாளர்களின் சலுகைகளை அதிகளவில் ஆய்வு செய்து குறைத்து வருகின்றன. பணிநீக்கங்களைத் தவிர, ஊழியர்களுக்கான உடற்பயிற்சி வகுப்புகள் மற்றும் அலுவலகப் பொருட்கள் பயன்பாடு உட்பட பல்வேறு நன்மைகளையும் வரவு செலவு திட்டத்தின் கீழ் குறைக்க தொடங்கியுள்ளன.