நெல்லை மாவட்டம்  களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு கோட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மலையோர கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.  இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மலையோர கிராம மக்கள் , வன குழுவினர்  கலந்து கொண்டனர் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார். அயல் நாட்டில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் அதற்காக விண்ணப்பிக்கும் முறை குறித்தும் இளைஞர்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக வேலைக்கு செல்ல விரும்புபவர் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் இணையதளமான www.omcmanpower.com என்ற பக்கத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.  தொடர்ந்து சூழல் இளையோர் விளையாட்டு மன்றங்களைச் சேர்ந்த  இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் வழங்கினார். அதைத் தொடர்ந்து மகேஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்பொழுது,



வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்புவர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம். தற்போது எங்கள் நிறுவனம் மூலம்  துபாயில் வீட்டு வேலை செய்ய 500 பேர், குவைத்தில் செவிலியர்கள் 500 பேர் வேலைக்கு எடுக்க ஒப்பந்தம் எடுக்கபட்டு வேலைக்கு ஆள் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  கொரோனாவுக்கு பிறகு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆங்கிலம் பேசக்கூடிய அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேலை செய்ய வேண்டுமென்றால் அவர்களின் மொழி உச்சரிப்புக்கு ஏற்ப மொழி திறன் பெற்றிருக்க வேண்டும். வேலைக்கு செல்வோர் அந்தந்த நாடுகள் மூலம் வைக்கப்படும் மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.




மேலும் திருச்சி, சென்னை, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் செவிலியர் கல்லூரிகளில் பயிற்சி அளிக்கபட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு 87 லட்சம் ரூபாய் நிதி கொடுத்துள்ளது. மேலும் ஜப்பானில் சுமார் 3000 இளைஞர்களுக்கு விவசாய வேலை வாய்ப்புகள் இருப்பதால் அது தொடர்பான ஒப்பந்தம் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2021-2022ம் ஆண்டில் 181 பேரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியுள்ளோம். அந்தந்த நாடுகளை சேர்ந்த அரசின் அனுமதி பெற்ற நம்பகத்தன்மையான ஏஜென்சிகளை தேர்வு செய்துள்ளோம். எனவே பொதுமக்களுக்கு வேலை உத்திரவாதம் இருக்கும் என்று தெரிவித்தார்.