மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர், சென்னை-5 அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம், சானிடோரியம் தாம்பரத்தில் காலியாக உள்ள 3 இளநிலை ஆசிரியர் மற்றும் 2 விடுதிக் காப்பாளர் (1-ஆண் மற்றும் 1- பெண்) பணியிடங்களை மதிப்பூதிய அடிப்படையில் முழுமையான கல்வித் தகுதி பெற்ற நபர்களை கொண்டு நிரப்பிக்கொள்ள நிறுவன மேலாண்மைக் குழுவின் வாயிலாக விண்ணப்பங்கள் சேகரிக்கப்படவுள்ளது.


பெறப்படும் விண்ணப்பங்கள் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையிலான தேர்வுக்குழுவின் மூலம் நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் பின்வரும் பதவிகளுக்கான பணி நியமனம் (முற்றிலும் தற்காலிகமான) செய்யப்பட உள்ளது. மேற்காணும் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை ஆசிரியருக்கான (Junior Diploma in Teaching for MR / D.T.Ed., (Special Education - ID / MR) ஊதியமாக ரூ. 12,000/- மற்றும் விடுதிக் காப்பாளருக்கான (பட்டதாரி ஆசிரியருக்குரிய கல்வித் தகுதிகளுடன் Senior Diploma in Teaching for MR / B.Ed., (Special Education ID / MR) ஊதியமாக ரூ. 15,000/- வழங்கப்படவுள்ளது.


எனவே, தகுதி வாய்ந்த நபர்கள் (செங்கல்பட்டு மற்றம் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது) தங்கள் விண்ணப்பங்களை மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம், சானடோரியம் தாம்பரத்தில் 20.02.2024–க்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பவும். (recruitmentgimr@gmail.com) என்கிற மின்னஞ்சலில் தங்களது விண்ணப்பங்களையும், சான்றிதழ்களையும் கட்டாயம் scanned copy-ஆக அனுப்பவும்). சான்றிதழ்கள் மின்னஞ்சலின் வாயிலாக பெறப்பட்டதும், விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கான Google form தங்களுக்கு அனுப்பப்படும். தகுதி வாய்ந்த நபர்கள் தரவரிசையின் அடிப்படையில் மேற்காணும் மின்னஞ்சலின் வாயிலாக நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள். தகுதிவாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ச.அருண்ராஜ், அழைப்பு விடுத்துள்ளார்.