1000 உழவர் நல சேவை மையங்கள் அமைத்திட 3 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரை மானியம் பெற்று சுயதொழில் துவங்க வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்களுக்கு அரிய வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் இந்த வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Continues below advertisement

42 கோடி ரூபாய் மாநில நிதி

மே 2021-ல் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் வேளாண்மைத் துறை என்று இருந்ததை உழவர்களின் நலன்காக்கும் பொருட்டு வேளாண்மை-உழவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்ததோடு, பல்வேறு உழவர்களின் நலன் காக்கும் முத்தாய்ப்பான திட்டங்களின் ஒன்றான வேளாண் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பை முடித்த இளைஞர்களின் படிப்பறிவும், தொழில்நுட்பத் திறனும் உழவர் பெருமக்களுக்கு உதவியாக இருந்து வேளாண் உற்பத்தியினை உயர்த்திடும் வகையில் 1,000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று 2025-26ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததை நிறைவேற்றும் வகையில் 42 கோடி ரூபாய் மாநில நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

6 இலட்சம் ரூபாய் வரை மானியம்

இத்திட்டத்தில், ரூபாய் 10 இலட்சம் முதல் ரூபாய் 20 இலட்சம் வரையிலான மதிப்பில் உழவர்நல சேவை மையங்கள் அமைத்திட 30 சதவீத மானியமாக 3 இலட்சம் ரூபாய் முதல் 6 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இம்மையங்களில் உழவர்களுக்குத் தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும் பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்குத் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும். அத்துடன் நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும். முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் மூலம் விவசாயிகள் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற உதவுவது மட்டுமல்லாமல், வேலையில்லாத வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் சுயதொழில் செய்வதற்கும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் இணையும் பயனாளிகள் உழவர்நல சேவை மையங்களை சிறப்பாக நடத்தும் வகையில் வேளாண்மை உழவர்நலத் துறையில் வழங்கப்படும் அனைத்து உரிமங்களும் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையப் பயனாளிகளுக்கும் வழங்கப்படும். இத்திட்டத்தில் இணையும் பயனாளிகளின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள உழவர் பயிற்சி நிலையம் / வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயிற்சியும் அளிக்கப்படும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

எனவே, இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு முடித்த நபர்கள் உரிய வங்கியில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

வங்கி நடைமுறைகளைப் பின்பற்றி கடன் ஒப்புதல் பெறப்பட்டபின். AGRISNET இத்திட்டத்தில் மானிய உதவி https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register பெற உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அரசின் உதவியுடன் துவங்கப்படும் சுயதொழில் என்பதால் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண் பட்டதாரிகள் / பட்டயதாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnagrisnet.tn.gov.in/