மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.


வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் 


தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல லட்சம் இளைஞர்கள் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்து கிடப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. அவ்வாறே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த அனைவருக்கும் அரசு வேலை என்பது நிச்சயமற்ற நிலை என்றாலும், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர அரசு பல்வேறு வகைகளில் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி, வங்கி கடன்கள் பெற்றுக் கொடுத்து அவர்களை தொழில் முனைவோர் ஆக்குவது, மேலும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலை வாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி வேலைவாய்ப்பை பெற்று தரும் பணியினை அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




செப்டம்பர் 21- ம் தேதி முகாம் 


இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு  தெரிவித்ததாவது; “மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் வருகிற செப்டம்பர் 21-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணிமுதல் மதியம் 3.00 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள சென்னை, கோவை, திருச்சி உட்பட பெருநகரங்களில் இருந்தும், மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும், YAZAKI INDIA, TVS GROUP, 5K CAR CARE DARLING  ELECTRICS, TVS TRAINING AND SERVICES LTD, ARC GROUPS, நாராயணன் ஜீவல்லரி TVS  SUPPLY CHAIN SOLUTIONS LTD  உட்பட 130-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்காக 10,000 -க்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த பலதரப்பட்ட வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். 


வெளிநாட்டு வேலை வாய்ப்பு 


மேலும் JEYRAM EDUCATIONAL TRUST, MANAKULA VINAYAGAR AND CHARITABLE TRUST, ELTEC FOUNDATION, போன்ற திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் கலந்துகொண்டு திறன் பயிற்சியளித்து வேலைவாய்ப்பை பெற்றுத்தரவும் உள்ளனர். அதுமட்டுமின்றி இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புகள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக போட்டித்தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்கள், மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவை வாயிலாக வங்கிக்கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படவுள்ளது. 




மேலும் விபரங்களுக்கு 


எனவே படித்து முடித்து தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற தமிழக அரசின் தனியார்துறை நிறுவனங்களில் வேலை தேடுவதற்கான இணையதளத்தில் பதிவுசெய்துகொள்வதோடு, இந்த முகாமில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04364 - 299790 என்ற மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.