இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பை உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கிட தமிழக அரசு பல்வேறு தொழில் நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புதிய தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. இதே போல சொந்தமாக தொழில் தொடங்குபவர்களுக்கும் பயிற்சி அளித்து கடன் உதவிகளும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் விமானம் மற்றும் கப்பலில் பணியாற்ற சூப்பர் வாய்ப்பையும் அரசு உருவாக்கியுள்ளது. இதற்கான அனைத்து செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளவுள்ளது.
விமானத்தில் வேலை வாய்ப்பு
விமானம் என்றாலே அனைவரும் ஆச்சரியமாகவும், வியப்பாகவும் பார்ப்பார்கள், எனவே அங்கேயே வேலை என்றால் கேட்கவா வேண்டும். கொண்டாட்டம் தான். அப்படி ஒரு வாய்ப்பை தான் அரசு ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாட்கோ நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலமாக பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்
என்னென்ன பயிற்சிகள்
- கேபின் க்ரூவ்,
- விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை பயிற்சி,
- பயணியர் சேவை மற்றும் பயணசீட்டு முன்பதிவு அடிப்படை பயிற்சி,
- சுற்றுலா போக்குவரத்து அடிப்படை பயிற்சி போன்ற பயிற்சி
நிபந்தனைகள் என்ன.?
பயிற்சிகளுக்கு உரிய சான்றிதழ்களை வழங்கி, வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து பயிற்சியை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த 18 முதல் 23 வயது நிரம்பி, 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 6 மாதம். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையும் தாட்கோவால் ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத ஊதியம் என்ன.?
பயிற்சி சான்றிதழ் உள்ளவார்கள் தனியார் விமான நிறுவனங்களிலும், சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக 20 ஆயிரம் ரூபாய் முதல் 22 ஆயிரம் ரூபாய் வரை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும் இதுமட்டுமில்லாமல் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் 50 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை தாட்கோ மூலம் விமான சேவை பயிற்சி பெற்ற 200 நபர்களுக்கு முன்னனி தனியார் நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவன சேவை மையங்களில் பணிபுரிந்து வருவதாகவும், எனவே, இப்பயிற்சியில் சேர்வதற்கு விருப்பமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.