கல்லீரல் நம் உடலின் சூப்பர் உறுப்பு என்றால் அது மிகையாகாது. ஏன் தெரியுமா? ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களையும், கழிவுகளையும் நீக்குவது மட்டுமின்றி, செரிமானத்தின்போது உறிஞ்சி கொண்ட சத்துகளை உடல் முழுவதும் ரத்தத்தில் கலக்கும் பணியில் ஈடுவதும் கல்லீரல் தான். உடலின் பிற உறுப்புகளை விட, அதிகளவிலான வேலைகளைச் செய்வதாலேயே அது சூப்பர் உறுப்பாக உள்ளது. 


ஆனால் கல்லீரலில் கொழுப்பு சேர்வதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து கல்லீரலின் இயக்கத்தையே நிறுத்தக்கூடியது.


கல்லீரலில் கொழுப்பு ஏன் சேர்கிறது?


அதிகளவில் மது அருந்துவது, உடல் பருமன் கொண்டோர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆகியோருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அசாதாரண உணவுப் பழக்கம், அதிகளவிலான கலோரிகளை உட்கொள்வது முதலானவற்றால் உணவில் இருந்து உறிஞ்சப்படும் கொழுப்புகள் கல்லீரலில் சேர்கின்றன. இதனால் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது.


இந்த நோய் விளைவுகள் எதனையும் ஏற்படுத்தாமல் சத்தமின்றி உருவாகும் ஒன்று. எனவே இதனை அல்ட்ரா சோனோகிராபி, ஃபைப்ரோ ஸ்கேன் முதலான தொழில்நுட்பங்களின் மூலமாகக் கண்டறியலாம். 


உடல் சருமம், கண் மஞ்சளாக மாறுவது ( மஞ்சள் காமாலை), வயிற்றின் வலது மேல் பகுதியில் வலி, வயிற்றில் வீக்கம், தலைச்சுற்றல், உடல்நலிவு, குழப்பம், தூக்கம் அதிகமாக வருவது போன்ற அறிகுறிகள் நோய் மிகுந்த பின்னரே தெரியவரும்,


இதுதவிர ஐந்து முக்கியமான அறிகுறிகளை நம் முகத்தில் கண்டால் அதை அலட்சியம் செய்ய வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


முகம் வீங்குதல்:


கல்லீரல் பாதிப்பு முற்றிவிட்டால் முகம் வீங்கும். அது கல்லீரல் புரதம் உற்பத்தி செய்யும் திறனை தடைபடுத்திவிடும். இது உடலில் ரத்த ஓட்டத்தைத் தடுப்பதோடு நீர் வெளியேற்றத்தையும் தடுக்கிறது. இதனால் முகம் உப்பிவிடுகிறது.


சருமம் கறுத்துப்போதல்


கல்லீரலில் கொழுப்புச் சேர்ந்தால் அதனால் சருமம் கறுக்கும். அகன்தோசிஸ் நீக்ரிகன்ஸ் என்ற நிலை உருவாகும். இது சருமத்தின் மடிப்புகளில் கறுமை நிறத்தை உண்டாக்கும். கழுத்துப் பகுதியில் தெரியும். இன்சுலின் ரெசிஸ்டன்ஸும் இதற்கு ஒர் காரணம்.


சிவப்பு நிறத்தில் சருமத்தில் புள்ளிகள்


சருமத்தில் சிவப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றும். இதை ரோஸாசியா என்று அழைக்கிறார்கள்.


சிராய்ப்புகள்


கல்லீரலில் கொழுப்பு சேர்வதால் உடம்பு ஊட்டச்சத்தை உறிஞ்சு கொள்ள முடியாத சூழல் உருவாகும். இதனால் சருமத்தில் டெர்மாடிடிஸ் என்ற நிலை உருவாகும். இத சருமத்தில் எரிச்சல், அரிப்பு, சிராய்ப்பு ஆகியனவற்றை உண்டாக்கும். முகத்தில் ஆக்னே உண்டாகும்.


கருவளையங்கள்


ஃபேட்டி லிவர் காரணமாக கண்ணில் கருவளையம் உண்டாகும். இது உடலில் நச்சுத்தன்மை அதிகரித்ததின் தாக்கமாகும்.


இந்த ஐந்து அறிகுறிகளைக் கண்டால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது அவசியம்.


உலக கல்லீரல் தினம்:


உலக கல்லீரல் தினம் (WLD) என்பது பொது மக்களுக்கு கல்லீரல் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19 ஆம் தேதி கொண்டாடப்படும் ஒரு உலகளாவிய சுகாதார நிகழ்வாகும்.


உலக கல்லீரல் தினம் 2023 கருப்பொருள்


இந்த ஆண்டு, 2023, உலக கல்லீரல் தின கருப்பொருள் " விழிப்புடன் இருங்கள், வழக்கமான கல்லீரல் பரிசோதனை செய்யுங்கள், கொழுப்பு கல்லீரல் யாரையும் பாதிக்கலாம் ." என்பதாகும்.


உடல் பருமன் (அதிக எடை), இன்சுலின் எதிர்ப்பு (நீரிழிவு) மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் போன்ற ஆபத்துக் காரணிகளைப் பொருட்படுத்தாமல், கொழுப்பு கல்லீரல் யாரையும் பாதிக்கும் என்பதால், வழக்கமான கல்லீரல் பரிசோதனையின் நடைமுறையை வலியுறுத்துவதே இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஆகும்.