ஆண்டுதோறும் பிப்ரவரி 4ஆம் தேதி சர்வதேச புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளை ஒட்டி வாசகர்களுக்கு சில புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.


இந்த நாளை கடைபிடிப்பதற்கு முன்னால் புற்றுநோய் ஏன், எப்படி வருகிறது என்பது பற்றி தெரிந்து கொள்வோம். ஒரு நபருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறை உருவாக்கும் அனைத்து விஷயங்களுமே புற்றுநோய் காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன.


புற்றுநோயை உண்டாக்கக் கூடிய சில காரணிகளைப் பட்டியலிடுகிறோம்:


1. புகைப்பிடித்தல்:


புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் என்பது சிகரெட் அட்டையில் தொடங்கி சினிமா கொட்டகை வரை எல்லா இடங்களிலும் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அது மனித மனங்களில் பதிவானதாகத் தெரியவில்லை. சிகரெட் புகைத்தல் புற்றுநோய் மட்டுமல்ல இன்னும் பற்பல நோய்களையும் உருவாக்கும். இதை வாசிக்கும்போதே நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தினால் கூட நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதில் இருந்து விடுபடலாம்.


2.உடல் உழைப்பு இல்லாதது


கிணற்றில் போட்ட கல் என்பார்களே அப்படித் தான் இன்று கணினி சார்ந்து வேலை செய்வோர் பலரின் நிலையும் உள்ளது. அலுவலகம் செல்ல வேலை செய்ய வீடு திரும்ப உணவருந்தி தூங்க என்று இருந்தால் உடல் உழைப்பு எங்கிருந்து வரும். ஒரு நாளைக்கு ஒரு மனிதர் 30 நிமிடங்கள் கூட உடற்பயிற்சி செய்யாவிட்டால் அவருக்கு நிச்சயம் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். ஆகையால் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யுங்கள் நுரையீரல் புற்றுநோய் தொடங்கி எல்லா நோய்களையும் தடுங்கள்.


3. உடல் பருமன்:


உடல் பருமன் இன்று குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை பெரும் பிரச்சினையாக உள்ளது. உடல் பருமனால் மார்பகப் புற்றுநோய், ஆசனவாய், குடல் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், கணையப் புற்றுநோய் ஆகியன ஏற்படும். அதிகப்படியான கொழுப்பு செல்கள் கூடுதலாக ஈஸ்ட்ரோஜென், இனுசிலினை சுரக்கும். இவை இரண்டுமே புற்றுநோயை உண்டாக்கக் கூடியது.


4. மோசமான உணவுமுறை


உணவுமுறை என்பது சீராக இருக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், புரதம் நிறைந்த பட்டாணி வகைகள், தேவையான அளவு சிவப்பு இறைச்சி என அனைத்துமே அளவாக உண்ணப்பட வேண்டும். சரிவிகத உணவு சரியான உணவு முறை புற்றுநோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவும்.


5.அதிகப்படியாக சூரிய வெளிச்சத்துக்கு உட்படுதல்


சூரிய வெளிச்சத்தால் மட்டுமே நம் உடலுக்கு தேவையான அளவு வைட்டமின் டி தர இயலும். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால் நஞ்சாகிவிடும். சூரிய வெளிச்சத்திற்கு நாம் அதிகப்படியாக உட்படும்போது அதிலிருந்து கதிர்வீச்சு நம்மை பாதிக்கும். ஆகையால் உச்சிவெயிலில் அதிக நேரம் இருக்கக் கூடாது. சன்ஸ்க்ரீன் கொண்ட ஆடை, குடை, கண்ணாடி ஆகியனவற்றுடன் உச்சி வெயிலை எதிர்கொள்ளலாம்.


6. மதுப்பழக்கம்


மது வீட்டுக்கும் நாட்டுக்கும் உயிருக்கும் கேடு என்பது உண்மை. மதுப்பழக்கம் புற்றுநோயை ஏற்படுத்தும். பெண்கள் ஒரு நாளில் ஒரு ட்ரிங்க் என்றளவில் ஆண்கள் இரண்டு ட்ரிங்க் என்ற அளவிலும் மட்டுமே மது அருந்தலாம். முற்றிலுமாக மதுவிலிருந்து விடுபடுவது பல்வேறு நோய்களில் இருந்தும் விடுவிக்கும்.


7. தொற்றுநோய்கள்


சில நேரங்களில் சில வைரஸ் தொற்றுகள் நமக்கு புற்றுநோயை உண்டாக்கக் கூடும். வைரஸ் தொற்றுகள் டிஎன்ஏவில் மாறுதல்களை ஏற்படுத்தி புற்றுநோய்க்கும் வழிவகுக்கலாம். ஆகையால் தொற்று நோய் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வதும். தொற்றுநோய் ஏற்படின் அதற்கு முறையான சிகிச்சை பெற்றுக் கொள்வதும் புற்றுநோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவும்.


2021 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு கோடியே எழுபத்து மூன்று இலட்சமாக இருந்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கை வரும் 2025 ஆம் ஆண்டில் மூன்றுகோடியை நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும், ஒவ்வொரு 15 பேரில் ஒருவருக்கு புற்றுநோயிருக்கிறது. 


புற்று என்பது உடலுறுப்புகளிலுள்ள சிலவகைச் செல்கள் கட்டுப்பாடற்று வளர்ந்துபெருகி உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் ஒரு நோயாகும். லட்சம் கோடிக்கணக்கிலான (Trillions) உயிரணுக்களால் ஆன மனிதவுடலின் எந்தவிடத்திலும் புற்று உருவாகலாம். பொதுவாக, மனிதச்செல்கள் வளர்ந்து பின்னர் 'செல்பிரிதல்' (Cell Division) முறை மூலம் உடலுக்குத் தேவையான புதியசெல்களாக உருவாகின்றன. அவ்வாறு உருவான செல்கள் நாள்பட நாள்பட முதிர்ந்து அல்லது சிதைந்து இறந்துவிடுவதால், அவற்றின் இடங்களில் புதியசெல்கள் உருவாகும். இதைத்தான் Apoptosis (முறையான செல்லழிவு-Programmed Cell Death) என்கிறது அறிவியல். இவ்வாறு முறையான செல்லழிவு தொடர்ந்து (சங்கிலி) நிகழ்வதால்தான் மனிதவுடல் உயிர்ப்புடன் இருக்கிறது.


சில நேரங்களில் (பல காரணிகளால்) இந்த முறையான செல்லழிவுத் தொடர்ச்சங்கிலி உடைந்து, ஒரு செல் மட்டும் தோன்றவேண்டிய இடத்தில் ஓராயிரம் செல்கள் தோன்றிப்பெருகலாம். இவ்வாறு, வரம்பின்றிப் பெருகும் செல்க்குவியங்கள் திசுக்கட்டிகள் (Tumours) எனப்படுகின்றன. இவை புற்றுநோயாக மாறக்கூடும்.