மன அழுத்தம், கவலை முதலான மனநல விவகாரங்களில் இருந்து மீள்வதற்கு எளிய வழியாக நடைபயணம் மேற்கொள்வது அறிவுறுத்தப்படுகிறது. உடல்நலம், மனநலம் ஆகியவற்றில் பல்வேறு பயன்களை அளிக்கும் நடைபயணத்தின் மூலம் உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்படுவதும், ஆரோக்கியம் மேம்படுவது முதலான நன்மைகளும் கிடைக்கின்றன. 


இதன் காரணமாகவே, மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோரை நடைபயணம் மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் வலியுறூத்துகின்றனர். மனநல பாதிப்பு என்பது மனிதர்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியது. வழக்கமான பணிகளைச் செய்வது, அன்றாட வேலைகளை மேற்கொள்வது ஆகிய சாதாரண பணிகள் கூட, மனநலப் பிரச்னைகள் இருந்தால் மிகப் பெரிதாகத் தோன்றும். இதனைச் சரிசெய்ய, மிகவும் சாதாரணப் பழக்க வழக்கங்களான நடைபயணம், நேரத்திற்கு உணவு உண்பது, நேரத்திற்குத் தூங்குவது முதலானவை பரிந்துரை செய்யப்படுகின்றன. மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட இயல்பான வாழ்க்கை முறையைச் சரிசெய்வதற்காக இவை பரிந்துரைக்கப்படுகின்றன. 


மனநலப் பிரச்னைகளால் பாதிப்பு கொண்டோருக்கு இவ்வாறான எளிதான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மிகவும் கடினமானது. எதையும் சரியாகச் செய்ய முடியாது என்பதால் அனைத்து பணிகளும் முதலில் மிகக் கடினமாகத் தோன்றும். பாதிக்கப்பட்டவர் தனது ஆற்றலைக் குறித்துக் கேள்வி எழுப்புமாறு இந்த நடவடிக்கைகள் உருவாகவும் வாய்ப்புகள் உண்டு. எனினும், நடைபயணம் மூலம் ஒவ்வொன்றாகப் படிப்படியாகத் தொடங்கும் போது, புதிய மாற்றங்களைக் காண முடியும் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். 



நடைபயணம் தொடங்கி இயல்பு வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம், மனநலப் பாதிப்புக்குள்ளானோருக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு, அவர்களை இந்த வாழ்க்கை முறைக்குள் முழுவதுமாகக் கொண்டுவருவதற்கு இவை பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும், இதனைச் செய்ய முடியும் என்று மனநலப் பாதிப்புக்கானோரை ஊக்குவிப்பதன் மூலம், அவர்களால் புதிதாக இன்னும் பலவற்றைச் செய்ய முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம், உடல்நலமும் பேணப்படுகிறது. 


உடல்நலமும், மனநலமும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், ஒன்றைச் சரிசெய்யாமல் மற்றொன்றைச் சரிசெய்ய முடியாது. நடைபயணம் மேற்கொள்வதால் தினமும் வெவ்வேறு மனிதர்களை எதிர்கொள்வது, அவர்களைப் பார்த்து புன்னகைப்பது முதலானவை மனநலத்தில் நேர்மறையான மாற்றங்களை அளிக்கின்றன. பசுமையான பூங்காக்களில் நடைபயணம் மேற்கொண்டால், அதுவும் மனநலத்தைச் சிறப்பாக மாற்றும். 



இன்றைய இயந்திர வாழ்க்கை முறையால், மனிதர்கள் தங்களுக்கான சுயத்தை அறிந்துகொள்ள நேரம் ஒதுக்கப்பட முடிவதில்லை. நடைபயணத்தால் சுயத்தை அறிந்துகொள்வதும், தனக்கான நேரத்தைச் செலவிடுவதும் நிகழ்கிறது. 


மனிதர்கள் தங்கள் வாழ்க்கைகளில் பல்வேறு பாத்திரங்களை மேற்கொண்டு இணைந்து வாழ்கிறோம். அனைவருக்கும் பல்வேறு பொறுப்புகள் இருக்கின்றன. வெறும் 10 நிமிடங்கள் மேற்கொள்ளும் நடைபயணத்தால், தனக்குத் தானே நன்மையை நிகழ்த்திக் கொள்ளும் திருப்தியும் கிட்டுகிறது. தனக்குத் தானே அதிக முக்கியத்துவம் அளித்துக் கொள்வது, நேர்மறையான சிந்தனைகளை உருவாக்குவதோடு, அது சுயமரியாதையையும் அளிக்கிறது என்று மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.