யுனிசெப் என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கொரோனா பெருந்தொற்று காலத்தில், இந்தியாவில் வாழும் 15 முதல் 24 வயது வரையுள்ளோரில் சுமார் 14 சதவிகிதம் பேர் மனச் சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையின்படி, 15 முதல் 24 வயது வரையுள்ளோரில், 7 பேர்களில் ஒருவருக்கு மனச்சோர்வு இருக்கிறது. 


மனநலம் குறித்த இந்த அறிக்கையை `The States of the World's Children 2021’ என்ற பெயரில் வெளியிட்டுள்ள யுனிசெப் நிறுவனம் உலக நிகழ்வுகள் நம் குழந்தைகளின் மனதை எப்படி பாதிக்கின்றன என்பதைப் பற்றிய ஆய்வாக வந்துள்ளது. 


21 நாடுகளில் ஆய்வு மேற்கொண்ட யுனிசெப், இந்தியாவில் வெறும் 41 சதவிகித இளைஞர்கள் மட்டுமே மனநலத்திற்கான மருத்துவ உதவியை நாட விரும்புவதாகத் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. பிற நாடுகளில், சராசரியாக சுமார் 83 சதவிகிதம் பேர் மனநலத்திற்காக மருத்துவ உதவியை நாட விரும்புகின்றனர். இந்த ஆய்வை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா வெளியிட்டார். 


இந்த அறிக்கையை வெளியிட்ட போது, அமைச்சர் மான்சுக் மாண்டவியா, `நமது சனாதனக் கலாச்சாரத்தில் மனநலம் குறித்து விரிவாக ஆன்மிக ரீதியில் விளக்கப்பட்டுள்ளது. நமது புராணங்களில் உடல், மனம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்தும் கூறப்பட்டிருக்கிறது. ஆரோக்கியமான உடலில் ஆரோக்கியமான மனம் வாழும். இளைஞர்களின் மனநலம் குறித்த அறிக்கையை யுனிசெப் சர்வதேச அளவில் வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்’ என்றார். 


மேலும் மத்திய அமைச்சர் மாண்டவியா கூட்டுக் குடும்பங்கள் அழிந்ததால் மனநலம் குறித்த பிரச்னைகள் தோன்றியதாகவும், தற்போதைய பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழித்தால் மனநலப் பிரச்னை வராது எனவும் கூறியுள்ளார். `முன்னேறிய சமூகத்தை உருவாக்குவதற்காக குழந்தைகளின் மனநலம் கண்காணிக்கப்படும். பள்ளி ஆசிரியர்களின் மனநலமும் மேம்படுத்தப்படும். ஏனெனில் குழந்தைகள் தங்கள் ஆசிரியர்களையே அதிகம் நம்புகின்றனர்’ என்றும் அமைச்சர் கூறியுள்ளார். 


கடந்த 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சுமார் 21 நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோரின் மனநலம் குறித்த யுனிசெப் ஆய்வில், இந்தியாவின் குழந்தைகள் மனநலம் குறித்த மருத்துவ உதவி பெறுவதற்குத் தயங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 21 நாடுகளில், மனநலத்திற்காக மருத்துவ உதவியை நாடுவதில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான இளைஞர்கள் வாழும் நாடாகவும் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளிம் சராசரியாக சுமார் 56 முதல் 95 சதவிகிதம் வரையிலான எண்ணிக்கையில், இளைஞர்கள் மனநலத்திற்காக மருத்துவ உதவியை நாடுவதைச் சிறந்த தீர்வாகக் கருதுவதாகவும் யுனிசெப் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.