ரத்த சர்க்கரை அளவு, இது நோயா அல்லது மருந்து நிறுவனங்களின் சதியா என்ற நீண்ட கால வாதம் உண்டு. உலகளவில் சமீபகாலமகா இந்தியாவில் தான் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


லைஃப்ஸ்டைல் வியாதி எனப்படும் வாழ்க்கைமுறையால் உருவாகும் வியாதிகளின் பட்டியலில் சர்க்கரை நோய்க்கு தான் முதலிடம் இருக்கிறது. ஏனென்றால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத போது ரத்த அழுத்தம் உண்டாகும், சர்க்கரையும், ரத்த அழுத்தமும் சேர்ந்தால் இதயம், சிறுநீரகம், மூளையைப் பாதிக்கும் என்று சங்கிலித் தொடர் போல் நோய் பாதிப்பை விவரிக்கின்றனர். இந்நிலையில், சர்க்கரை நோய்களில் பல்வேறு வகைகளும் இருக்க டைப் 2 டயபெட்டீஸ் எனப்படும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சில நேரங்களில் டயட் மூலம் குணப்படுத்தியே விடலாம் என்கிறது ஆய்வு முடிவு ஒன்று.


யுனிவெர்ஸிட்டி ஆஃப் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் இங்கிலாந்தின் டெஸ்ஸைட் பல்கலைக்கழகம் இணைந்து நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற மருத்துவ இதழில் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளது. 12 வாரங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எவ்வாறாக பிரத்யேக டயட் மூலம் ரத்த சர்க்கரை அளவை பழைய நிலைக்குக் கொண்டு வரலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


இந்த ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட நபர்கள் அனைவருமே டைப் 2 டயபெட்டீஸால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகையால் அவர்களுக்கு குறைந்த கார்போஹைட்ரேட்ஸ், அதிக புரதம் கொண்ட உணவுத் திட்டம் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் கண்காணிக்கப்பட்டது.




ஆய்வின் முடிவில் டைப் 2 டயபெட்டீஸைக் குணப்படுத்தலாம், சில நேரங்களில் அந்த நோயாளிகளின் சர்க்கரை அளவை டயட் மூலம் மட்டுமே பழைய நிலைக்குக் கொண்டு வரலாம் என ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான மருத்துவர் ஜொனாத்தன் லிட்டில் தெரிவித்துள்ளார். ஒரு குடும்ப மருத்துவரைவிட மருந்துக்கடைக்காரரை எளிதில் மக்களால் அணுக முடிகிறது. அதுவும் குறிப்பாக கிராமப்புறங்களில் இதுவே நிலைமையாக இருக்கிறது. டைப் 2 டயபெட்டீஸ் இருப்பவர்கள் கிராமப்புறங்களில் குறிப்பாக அதிகம் பேர் மருந்துக்கடைக்காரர்களிடமே தங்களின் ரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்கின்றனர். ஆகையால் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிக்கும் பிரத்யேகமாக கம்யூனிட்டி ஃபார்மசிஸ்ட்களை நியமிப்பதன் மூலம் மக்களின் சர்க்கரை அளவைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் ஜொனாத்தான் கூறியுள்ளார். இவர் யுபிசி ஒக்கானகன்ஸ் ஸ்கூல் ஆஃப் ஹெல்த் அண்ட் எக்சர்சைசஸ் கல்லூரியில் பேராசிரியாக இருக்கிறார்.


டைப் 2 டயாபெட்டீஸ் நோயாளிகள் குறைந்த காலரி, குறைந்த கார்போ உணவுகளை உட்கொள்ளும் போது அவர்கள் தங்களின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகளின் அளவைக் குறைக்க வேண்டும் இல்லை ஒட்டுமொத்தமாகவே நிறுத்த வேண்டும். இதனை கம்யூனிட்டி ஃபார்மசிஸ்ட்ஸ் மிகச் சிறப்பாக செய்ய முடியும். அவர்களே ரத்த சர்க்கரை அளவைக் கண்டறிந்து அதற்கேற்றார் போல் மருந்துகளின் அளவை மாற்றவும், குறைக்கவும் முடியும்.


இந்த ஆய்வில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்டோர் குறைந்த கார்போ, குறைந்த காலரி, அதிக புரதம் கொண்ட டயட்டைப் பின்பற்றியதோடு ரத்த சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதித்துக் கொண்டனர். 12 வாரங்களுக்குப் பின்னர், டைப் 2 டயாபெட்டீஸ் கொண்டிருந்த 3ல் ஒருவருக்கு ரத்த சர்க்கரை அளவு பழைய நிலைக்குத் திரும்பியிருந்தது. எஞ்சியவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. 


இந்த ஆய்வை மருத்துவர் ஜொனாத்தானுடன் இணைந்து மேற்கொண்ட இங்கிலாந்தின் டெஸ்ஸைட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் மருத்துவர் ஆலன் பேட்டர்ஹேம், ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தால் டைப் 2 டயாபெட்டீஸ் நோயாளிகள் சிலருக்கு ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், சிலருக்கு பூரணமாகக் குணப்படுத்தவும் முடிந்தது. இதில், கம்யூனிட்டி ஃபார்மசிஸ்ட்களின் பங்களிப்பு அளப்பரியது என்று கூறினர்.