Vijay Padhaneer: பதநீர் என்றால் என்ன அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.


பதநீர் பற்றி பேசிய விஜய்:


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் விஜய் பேசிய ஒவ்வொரு விஷயமும் தற்போது, மாநில அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. அதில், பல்வேறு கொள்கை மற்றும் செயல்திட்டங்களும் வெளியிடப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று தான், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில், பதநீரை மாநில பானமாக அறிவிப்பேன் என்று அறிவிப்பு. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பதநீர் என்பது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் பதநீர் என்றால் என்ன? அதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.


பதநீர் என்றால் என்ன?


பனையில் உள்ள பாளையை  கீறி விட்டு சுண்ணாம்பு தடவப்பட்ட பானையில் சேகரிக்கப்படும் திரவம் தான் பதநீர். அதேநேரம்,  திரவத்தை சேகரிக்கும் பானையில் சுண்ணாம்பை சேர்க்காவிட்டால், நொதித்தல் வினை நிகழ்ந்து அது கள்ளாக வரும். அதாவது அந்த திரவத்தில் நுண்ணுயிர் வளர்ந்து  நுரைத்து புளிக்கும். கள் அளவோடு அருந்தினால் ஆரோக்கியம் அளித்தாலும், போதை ஏற்படுத்தும் தன்மையை கொண்டதாகும். ஆனால், பதநீர் என்பது போதைத்தன்மை அற்றது. ஆரோக்கியமான மற்றும் இனிப்புச் சுவை கொண்ட பானம் ஆகும். இது உடலுக்கு மிகவும் நல்லது. இது தென்னை, பனை மற்றும் கித்துல் போன்ற மரங்களின் பூம்பாளைகளில் இருந்து கிடைக்கிறது.


ஊட்டச்சத்துகள்:


பதநீரில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம் பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்றவை அடங்கியுள்ளன.


பதநீரின் நன்மைகள்:



  • உடலில் நீர் பற்றாக்குறை அல்லது நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் போது பதநீர் குடித்தால், அது தண்ணீர் பற்றாக்குறையை போக்கும்.

  • சிறுநீர் கழிக்கும் இடத்தில் எரியும் உணர்வு ஏற்பட்டால் பதநீர் குடித்தால் அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

  • காசநோயிலிருந்து நிவாரணம் பெற பதநீர் குடிக்கலாம்.

  • மஞ்சள் காமாலை நோயாளிகளுக்கும் பதநீர் நன்மை பயக்கும்

  • கண் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த பதநீர் குடிக்கலாம்

  • வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு பதநீர் குடிக்கலாம். 

  • மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையை நீக்கி வயிற்றை குளிர்விக்கிறது

  • உடலில் ரத்தம் குறைவாக இருந்தால், பதநீர் குடிக்கலாம். இது உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கும்.

  • பெரும்பாலான பெண்கள் கருவுற்ற காலத்தில் ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பிரசவத்தின் போது பிரச்சனைகளை தவிர்க்க, உடலில் போதுமான அளவு ரத்தத்தை அதிகரிக்க பதநீர் குடிப்பது நல்லது.

  • உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்கள் இந்த பானத்தை அளவுடன் குடித்து வந்தால் பலன் கிடைக்கும்

  • பதநீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நகங்கள், முடி மற்றும் சருமம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பல்வேறு செல்கள் சரியாகச் செயல்படவும் உதவும்.

  • எலும்புத் தேய்மானம் போன்ற எலும்புத் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்க இந்த பானம் உதவுகிறது. ஏனெனில் இதில் போதுமான அளவு கால்சியம் உள்ளது.

  • பதநீரில்  இருக்கும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

  • பதநீர் அருந்துவது தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும். காரணம் இதில் தாய்ப்பால் உற்பத்திக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.


இப்படி ஏராளமான நன்மைகள் நிறைந்த பதநீரைத் தான், மாநில பானமாக அறிவிப்போம் என, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், இதே பதநீர் கொண்டு தயாரிக்கப்படும் கருப்பட்டி பாலும் ஆவினில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.