உடல் பருமன் நோயாளிகள் மருத்துவர்களுடன் அதிகமாக வாக்குவாதம் செய்வார்கள் என்றொரு ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிகமாக எழுந்த உடல் உபாதைகளில் ஒன்று உடல் பருமன் நோய். 


உடல் பருமனால் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவர்கள் உடல் பருமனைக் குறைக்கக் கூறும் அறிவுரைகளை ஏற்காமல் அதிகமாக வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள் என்று ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுக்குமீறிய வகையில் உடல் பெரிதாக சதைபோடுவதை உடற் பருமன் (obesity) அல்லது உடல் கொழுப்பு எனலாம். உடல் கொழுப்பு சேகரித்து வைப்பது உடல் இயக்கத்தின் சாதாரண ஓர் இயல்புதான், ஆனால் அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது என்பதுடன் அது ஒரு நோயாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.


ஆனால் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் உடல் பருமனுக்கு ஹார்மோன், மரபுவழி போன்ற தங்கள் கைமீறிய விஷயங்களையே காரணமாகச் சொல்கிறார்கள் என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உலக சுகாதார அமைப்பு சொல்வதென்ன?
உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி கடந்த 40 ஆண்டுகளில் உடல் பருமன் நோய் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாம். உடல் பருமன் நோய் அதிகரிக்க நோயாளிகளின் ஒத்துழைப்பின்மையும், அவர்களின் வாழ்க்கைமுறை பிரச்சினைகளும் கூட காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி 5 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் மட்டும் 39 மில்லியன் பேர் உடல் பருமன் நோயால் அவதிப்படுகின்றனர். உலக அளவிலேயே உடல் இளைத்தவர்களைவிட உடல் பருமனானவர்களே அதிகமாக இருக்கின்றனர். சப் சஹாரன் நாடுகளான ஆப்பிரிக்கா, ஆசியாவின் சில நாடுகளைத் தவிர உடல் பருமனே அதிகமாக இருக்கிறது.




அதேபோல், உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களே மருத்துவர்களுடன் அதிகமாக வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். உடற்பயிற்சி செய்யவோ அல்லது டயட் இருக்கவோ சொன்னால் அவர்களுக்கு ரொம்பவே கோபம் வருகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


இடுப்பின் அளவு அதிகமாக அதிகமாக, நம் ஆயுளின் அளவு குறையும் என்பது இயற்கையின் நியதி. கடந்த ஆண்டில் உலக அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தவர்களில் உடல் பருமனாக இருந்தவர்கள்தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகவே உள்ளது என்று வருந்துகிறது உலக சுகாதார நிறுவனம்.


எனவே, மருத்துவர்கள் உடல் பருமனைக் குறைக்க வழிவகைகள் சொன்னால் அதை வாக்குவாதம் செய்யாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே ஆய்வறிக்கையின் முடிவுரையாக கொடுக்கப்பட்டுள்ளது.


உடல்பருமனால் ஏற்படும் உபாதைகள் என்னென்ன?
1. உடல் பருமன் ஏற்பட்டால் அது இதய நோய்கள், ஸ்ட்ரோக், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.
2. உடல் பருமன் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.
3. ஆர்த்திரிடிஸ் ஏற்படும் அபாயம் அதிகம்.
4. கல்லீரல், சிறுநீரகம், குடல், மார்பகப் புற்றுநோய் வாய்ப்பும் அதிகம்.


ஆகையால் உடல் பருமன் ஏற்படாமல் சீராக உடல் நலனைப் பேணுவது அவசியம்.