உடலில் தலையிலோ, எலும்பு மூட்டுகளிலோ கடுமையான வலி ஏற்பட்டால், நாம் அனைவரும் வலி நிவாரணிகளை உண்பது வழக்கம். எனினும், வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வது மாரடைப்பால் உயிர் இழப்பதையும், பக்கவாதத்தையும் 50 சதவிகிதம் பேரில் ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. பாரசிட்டமால், இபுப்ரோஃபென், டைக்லோஃபெனாக் முதலான வலி நிவாரணிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது ஏற்படுத்தும் பல்வேறு பக்க விளைவுகள் மிகவும் ஆபத்தானவை ஆகும். மேலும், இந்த மருந்துகளில் ஸ்டீராய்டுகள் இருப்பதில்லை என்பதால், அவை சிறுநீரகம் உடலில் இருந்து நீரையும், சோடியத்தையும் பிரிக்கும் வேகத்தைக் குறைப்பதோடு, ரத்த ஓட்டத்தை மேலும் அதிகரிக்கிறது. 


உடலில் ரத்த ஓட்டம் அதிகரிப்பது, உடலில் இருக்கும் ரத்த நாளங்கள் கிழிவதற்கான அபாயத்தை உருவாக்குவதோடு, பாதிக்கப்படுவருக்கு மாரடைப்பு, பக்கவாதம் முதலானவற்றை ஏற்படுத்துகிறது. மேலும், உடலில் ரத்த அழுத்தத்தைக் குறைக்க பயன்படும் மருந்துகளையும், வலி நிவாரணிகள் செயலிழக்கச் செய்வதாகவும் சமீபத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. வலி நிவாரணிகளை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு அசௌகரியம், பதட்டம் அடைவது, நெஞ்சு வலி, அதிகளவில் வியர்வை வழிதல் முதலானவை ஏற்படும். 


வலி நிவாரணிகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?


1. பாரசிட்டமால், இபுப்ரோஃபென், டைக்லோஃபெனாக் முதலான வலி நிவாரணிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது சிறுநீரகங்களின் இயல்பான செயல்பாட்டைக் கடுமையாக முடக்குகிறது. 


2. உடலில் நீர், சோடியம் ஆகியவற்றின் அளவைக் கூட்டி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து வேகப்படுத்துகிறது. இதனால் நரம்புகள் முறுக்கிக் கொள்வது நிகழ்கிறது. 



3. உடலில் ரத்த அழுத்தத்தை சீராக்கும் பல்வேறு மருந்துகளையும் வலி நிவாரணிகள் செயலிழக்கச் செய்கின்றன. 


4. குமட்டலை அதிகரிக்கிறது.


5. அரைதூக்க நிலையில் இருக்கச் செய்கிறது. 


6. உடலில் அரிப்பை ஏற்படுத்துவதோடு, வியர்வை சுரப்பை அதிகரிக்கிறது.


7. மன அழுத்தம் ஏற்படுகிறது.


8. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பாதிக்கப்படுகிறது. 


9. தொடர்ந்து இந்த மருந்துகள் உட்கொள்வது உடலில் சகிப்புத் தன்மையை ஏற்படுத்துகின்றன. இதனால் உடல் வலி ஏற்படும் போது முன்பை விட கூடுதலான எண்ணிக்கையில் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்ள நேரும். 


10. வலி நிவாரணிகளுக்கு அடிமையாதல். வலி நிவாரணிகள் தேவைப்படாத நேரங்களிலும் அவற்றைப் பயன்படுத்துவது அவற்றிற்கு அடிமையாகியிருப்பதைக் குறிக்கும். 



வலி நிவாரணிகளைத் தொடர்ந்து உட்கொள்பவர்கள் எப்போது உடனே மருத்துவரைச் சந்திக்க வேண்டும்?


1. பார்வை குறைபாடு
2. சிறுநீரகத் தொற்றின் அறிகுறிகள்
3. மூச்சு விடுவதில் சிரமம்
4. விழுங்குவதில் சிரமம்
5. பேச்சு குளறுதல்
6. தீவிர வயிற்றுப் போக்கு
7. உடலின் குறிப்பிட்ட பகுதியில் உணர்ச்சியின்மை


மேலே குறிப்பிட்டிருக்கும் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.