இந்தியாவில் உடல் பருமன் (Obesity) எனப்படும் உடல்பருமன் நோய் அதிகரித்து வருவதாக அண்மையில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


இந்தியாவில் இன்னமும் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும் கூட உடல்பருமன் நோயும் அதிகரித்து வருகிறது எனக் கூறுகிறது தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய பெண்கள், ஆண்கள் மத்தியில் உடல்பருமன் நோயானது 4% அதிகரித்துள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வீல் 2.1% ஆகவே இருந்தது.


இந்நிலையில் குழந்தைகள் மற்றும் பெரியோர் மத்தியில் உருவாகும் உடல் பருமனைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.


குழந்தைகள் மத்தியில் உடல்பருமன் ஏற்படுவதைத் தடுக்க ..


முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கவும்:


குழந்தைகள் மத்தியில் உடல்பருமன் ஏற்படுதுவதைத் தடுக்க குழந்தை பிறந்ததில் இருந்து 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கலாம். அதைத் தாண்டி வேறெதுவுமே கொடுக்கக் கூடாது. தண்ணீர் கூட தேவையில்லை. தாயின் பாலில் இருந்து குழந்தைக்கு தேவையான அனைத்து நோய் எதிர்ப்பு கூறுகளும் குழந்தைக்கு அந்த காலகட்டத்தில் கிடைத்துவிடும்.


சந்தை உணவுகள் கூடாது..
6 மாதங்களுக்குப் பின்னர் திட உணவு ஆரம்பிக்கும் போது சந்தையில் கிடைக்கும் ரெடிமேட் உணவுகள் கொடுக்கக் கூடாது. முழுக்க முழுக்க வீட்டில் சமைத்த உணவையே கொடுக்க வேண்டும். பிஸ்கட், ஜூஸ், கோலா வகை உணவுகளை கொடுக்கக் கூடாது. அதில் அதிகமான சர்க்கரையும் உப்பும் இருக்கும். அது எதிர்காலத்தில் உடல் பருமன் ஏற்பட வழிவகுக்கும்.


பசித்தால் மட்டுமே உணவு


குழந்தைகளுக்கு பசி எடுத்தால் மட்டுமே உணவு கொடுங்கள். இல்லாவிட்டால் அது உடல்பருமனுக்கு வழிவகுக்கும். நீங்களும் அளவுக்கு அதிகமாகவும், பசி இல்லாத போதும் சாப்பிடாதீர்கள். உங்களைப் பார்த்துதான் உங்கள் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.


இவற்றை குழந்தைப் பருவத்தில் இருந்தே விதைத்தால் குழந்தைகள் ஆயுளுக்கும் ஃபிட்டாக இருப்பார்கள்.




பெரியோர்களிடம் உடல்பருமனை குறைப்பது எப்படி?


பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்


பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் இருக்கும். அவற்றை அதிகமாக உட்கொள்ளும் போது உடல் எடை அதிகரிக்கும். அவற்றில் உள்ள அதிகப்பட்டியான உப்பும், சர்க்கரையும் நாவிற்கு சுகமாக, சுவையாக இருக்குமே தவிர ஊட்டசத்து கொண்டிருக்காது.


நிறைய காய்கறிகள், பழங்கள் சாப்பிடவும்


நிறைய காய்கறிகள், பழங்கள் சாப்பிடவும். இவை உங்களின் வயிற்றுக்கு நிறைவைத் தரும். உடலுக்கும் ஊட்டச்சத்தை தரும். நிறைய காய்கறி, பழங்கள் சாப்பிட்டால் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் குறைந்ந்துவிடும்.


உடற்பயிற்சி அவசியம்:


இதுதான் மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான மனது எல்லாம் முக்கியம்தான். அதேவேளையில் உடற்பயிற்சியும் அவசியம். உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முடியும்.