சர்க்கரை நோய் இப்போதைய காலகட்டத்தில் 5 வயது முதல் அனைவரையும் பாதிக்கிறது. உண்மையில் சர்க்கரை அதிகமாதல் நோயா என்றால் அது வியாதி அல்ல என்றுதான் கூற வேண்டும். ஆனால் அதை கவனிக்காமல் தடுக்காமல் விட்டால் பல்வேறு நோய்களை வரவேற்கும் வரவேற்பாளராக மாறிவிடும்.


சர்க்கரை என்பதே நம் வாழ்க்கை முறையால் ஏற்படும் பாதிப்புதான். நீங்கள் எடை அதிகம் கொண்டவராக இருந்தால் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். தகுந்த பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்து உங்கள் உடல் எடையில், 5% மாவது குறைத்துவிடுங்கள். கூடவே, அதிக நார்ச்சத்து, குறைந்த ட்ரான்ஸ் ஃபேட் மற்றும் சர்க்கரை கொண்ட உணவை உட்கொள்ளுங்கள். அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். இப்படி லைஃப்ஸ்டைலை மாற்றிவிட்டால் சர்க்கரையை தள்ளிவைக்கலாம்.


சரி சர்க்கரை பாதிப்பு வந்தேவிட்டது என வைத்துக் கொள்ளுங்கள். அப்போது நாம் முதலில் செய்ய வேண்டியது உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றுவதே ஆகும். லோ கார்ப், ஹை ஃபைபர் இதுதான் தாரக மந்திரம். நம் தென்னிந்திய உணவில் அதுவும் குறிப்பாக தமிழக உணவில் அரிசி சாதம், இட்லி, தோசை என கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்த உணவே அதிகம் அப்படியிருக்கும்போது அதை எப்படி நமக்கேற்ற மாதிரி மாற்றிக் கொள்வது எனக் கேள்வி எழலாம். ரொம்பவே எளிதுதான். அரிசிக்கு பதில் சிறு தானியங்கள். அதிலும் குறிப்பாக கேரளத்து மட்டை அரிசியைப் பயன்படுத்தலாம். கேரளாவின் பாலக்காட்டில் விளையும் இந்த அரிசி மட்டா அரிசி, ரோஸ்மட்டா, பாலக்காடன் மட்டா அரிசி, கேரள சிவப்பு அரிசி, சிவப்பு அரிசி என்றெல்லாம் அறியப்படுகிறது. இதை சாதமாகவும், இட்லி மாவாகவும், அப்பம் இன்னும் பிற திண் பண்டமாகவும் மாற்றலாம். வாருங்கள் மட்டை அரிசியின் பயன்களைப் பார்ப்போம்.


ஊட்டச்சத்து நிறைந்தது:


மட்டை அரிசியின் பெரிகார்ப் எனப்படும் வெளிப்புற பகுதியில் அத்தனை ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. பட்டை தீட்டப்பட்ட அரிசியில் இந்த சத்துக்கள் குறைந்து விடுகின்றன. கேரளத்து சிவப்பு அரிசியில் வைட்டமின் சத்துக்கள், நார்ச்சத்து, தாதுக்கள் நிறைந்துள்ளன.


மெக்னீஸ்யம் நிறைந்துள்ளது:


சிவப்பு அரிசியின் வெளிப்புறத்தில் மெக்னீஸ்யம் நிறைந்துள்ளது. இது உடலில் பல்வேறு என்சைம் எதிர்வினைகளுக்கு அவசியமானது. மெக்னீஸ்யம் குறைந்தால் உடலில் பல்வேறு குறைபாடுகள் ஏற்படும். அரை கப் சிவப்பு அரிசியில் 42 கிராம் மெக்னீஸ்யம் நிறைந்துள்ளது. இது இதய பாதிப்புகளை சரி செய்கிறது. ஆஸ்டியோபோரோஸிஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.


புற்றுநோய் வருவதை தடுக்கிறது:


சிவப்பு அரிசி உண்பதால் இதய நோய் பாதிப்புகளுக்கான ஆபத்து குறைவதோடு. புற்றுநோய் ஏற்படாமலும் தடுக்கிறது. இதில் கொழுப்புச் சத்து குறைவு. அதேபோல் இது ரத்த நாளங்களில் அடைப்பு, கட்டி ஏற்படாமல் தடுக்கிறது.


சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது:


கேரள மட்டா அரிசியில் கால்சியமும், மெக்னீஸ்யம் நிறைந்துள்ளதால் சர்க்கரை பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. சர்க்கரை பாதித்தோர் இதனை உட்கொள்வதால் பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதன் குறைந்த க்ளைசிமிக் இண்டக்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தாக ஆக்குகிறது. இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் ஏற்படாமல் பாதுகாக்கிறது.


நார்ச்சத்து நிறைந்துள்ளது:


இது உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் நார்ச்சத்தை தருகிறது. இதனால் மலச்சிக்கல் தீர்கிறது. இதனால் கொஞ்சம் சாப்பிட்டால் கூட பசியுணர்வு கட்டுப்படுகிறது. அதனால் அன்றாடம் உண்ணும் உணவின் அளவு சரியான அளவிற்கு மாறுகிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து கார்போஹைட்ரேட்ஸ் உடலில் கிரஹித்துக் கொள்ளப்படும் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. 


வைட்டமின் ஏ, பி உள்ளது:


மட்டை அரிசியில் வைட்டமின் சத்துக்களும், தாதுக்களும் நிறைவாக இருந்தாலும் இதில் ரொம்பவே தாராளமாக வைட்டமின் ஏ, பி உள்ளது. அது மட்டுமல்லாமல் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.