நமக்கு விருப்பப்பட்ட எந்த உணவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம், ஆனால் எப்படி சாப்பிடுகிறோம்? எந்தளவிற்கு சாப்பிடுகிறோம் என்பதில் தான் நம் உடலினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.


நம் உடலை எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், ஸ்லீம்மாகவும் வைத்திருக்க நினைப்போம். ஆனால் நிச்சயம் அதனைப்பின்பற்றுவது மிகவும் கடினமாக விஷயம் தான். இந்நிலையில் நாம் நினைப்பது போன்று யாராவது ஒருவரைப்பார்த்தால் பொறாமைப்படாமல் இருக்க மாட்டோம். அப்படித்தான் இந்த வயசுலயும் எப்படி உடம்பினை பிட்னஸாக வைத்திருக்கிறார்? என தமிழக டிஜிபியான சைலேந்திரபாபினை பார்த்து நினைக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர். சமீபத்தில் உடம்பினை எப்படி பிட்னஸாக வைத்திருக்க வேண்டும் என்ற வீடியோவினை வெளியிட்ட நிலையில் அது பயனர்களுக்கிடையே அதிக வரவேற்பினைப்பெற்றது. இந்நிலையில் தான் பலரும் நீங்கள் எப்படி உங்களது ஹெல்த்தினை பார்த்துக்கொள்கிறீர்கள்? என்ன தான் உணவினை உட்கொள்கிறீர்கள் என பலரும் கேட்கத்தொடங்கிவிட்டனர்.


இதனையடுத்து தான், என்ன உணவினை 3 வேளைகளும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் என்ன பிரேக் பாஸ்ட் அதாவது காலை உணவு என்ன எடுத்துக்கொள்ள வேண்டும்? என்ற மக்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.“ நான் தினமும் காலையில் கொஞ்சம் ஃப்ரூட் சாலட், அதில் கிர்ணி பழமும், ஆப்பிளும் உள்ளது.  வேக வைத்த சுண்டல், 3 மூட்டையு்டன் ஒருகப் பால் எடுத்துக்கொள்வேன். சில நேரங்களில் நட்ஸட்சும் எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்“.  ஒரு சிலர் கொரோனா சமயத்தில் சிக்கன், முட்டைப்போன்றவற்றை சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு எந்தவித அறிவியல் ரீதியான தகவல்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் இதனை நம்பத்தேவையில்லை என தெரிவித்துள்ளாார். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த நமக்கு புரோட்டீன் மிகவும் அவசியமாக உள்ளது. எனவே சிக்கன், மீன், முட்டை போன்று நோய் எதிர்ப்பு சக்தியுடைய உணவினை உட்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், நான் 20 வருடங்ளாக இதனைத்தான் பின்பற்றுகிறேன் என காலை உணவு குறித்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.





பின்னர், மதிய உணவைப்பற்றிய வீடியோ ஒன்றில், என்ன வகையான உணவு வேண்டுமானாலும் சாப்பிடலாம், ஆனால் அதனை அளவோடு சாப்பிட வேண்டும் என்பதில் தான் நம்முடைய உடல்நலத்தினை பாதுகாக்க முடியும் என தெரிவித்துள்ளார். மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 1800 கலோரிகள் தேவைப்படுகிறது.  என்னைப் பொறுத்தவரை நான், குறைவான சாப்பாட்டுடன், மீன் குழம்பு, வீட்டில் வளர்ந்த கீரை, அவியல், கொஞ்சம் தயிர், ஊறுகாய் எடுத்துக்கொள்வேன். இவற்றில் எந்த அளவுக்கு சாதம் சாப்பிடுகிறோமோ, அந்த அளவுக்கு காய்கறியை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். அசைவம் சாப்பிடாதவர்கள் புரோட்டின் நிறைந்த பருப்பு வகைகளை நிறைய சாப்பிடலாம். காய்கறிகளையும் நிறைய எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சாதத்தின் அளவை மட்டும் குறைத்துக் கொண்டால் நல்லது.  இதனால் உடலில் எடை கூடும். சர்க்கரை நோய் எளிதில் வரும் என்பதால் இதனை இனி நடைமுறைப்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.


அடுத்ததாக, இரவு உணவினைப்பற்றி குறிப்பிட்டுள்ள சைலேந்திர பாபு, காலை மற்றும் மதியம் அதிக அளவு சாப்பிட்டினை எடுத்துக்கொண்டால் இரவில் கொஞ்சம் சாலட் சாப்பிட்டுக்கொள்ளலாம். இல்லையெனில், அந்தந்த சீசனில் கிடைக்கும் மாம்பழம் போன்ற  என்னென்ன பழங்கள் கிடைக்கிறதோ?  அதனை எடுத்துக்கொள்ளலாம். அதோடு வேக வைத்த பாசிப்பயறு, வறுத்த மீன் ஆகியவற்றினையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை பொறித்த மீனில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால் வறுத்த மீனுக்கு பதிலாக வேகவைத்த மீனினை எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார். மேலும் நாம் அளவோடு சாப்பிட்டால் உணவில்லாமல் இருக்கும் மற்றவர்களுக்கு கிடைக்கும் என்பதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதோடு மட்டுமின்றி அரசு ஊழியர்கள் போன்றவர்கள் அவர்களது வாழ்க்கையில் 4 குடும்பத்திற்காவது உணவினை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இதற்கு குடும்பத்தில் ஒருவருக்கு படிப்பதற்கு உதவி செய்வதை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.





இதோடு மட்டுமின்றி நம்முடைய உடலை மேலும் வலிமையாக வைத்துக்கொள்ள இளநீர் வாரத்திற்கு ஒருமுறையாவது பருக வேண்டும் என தெரிவித்துள்ளார். நான் தினமும் 50 கிலோ மீட்டர் சைக்கிளிங் சென்று வந்தவுடன் சாலையில் எங்கு இருந்தாலும் இளநீர் பருகுவதை மறக்க மாட்டேன் என வீடியோவில் கூறியுள்ளார். மேலும் இதில் கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் பேரம் பேசாமல் வாங்கி குடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதோடு நாள் ஒன்றுக்கு 2 லிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் நம் உடலுக்கு தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி பல்வேறு கூட்டங்களில் பேசிய பொழுதே சைலேந்திர பாபுவிற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நேரத்தில் எப்படி அவரது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் என்பது பற்றியும், அவரது உணவு முறைகளைப்பற்றியும் விரிவாக தெரிவித்துள்ள வீடியோ இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப்பெற்றுள்ளது.