தக்காளி இந்திய சமையலில் தவிர்க்க முடியாத ஒரு காய். ஆனால் உண்மையில் தக்காளி பழ வகையைச் சேர்ந்தது. தக்காளி தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் வளர்கிறது. தாவரவியல் ரீதியாக இது பழம் என்றாலும் கூட காய்கறி போல் சமைக்கப்படுகிறது. ஐரோப்பியர்கள் முதன்முதலில் இந்தப் பழத்தை விஷம் நிறைந்த பெர்ரி வகை என்றே நினைத்தனர்.


ஆனால் ஸ்பேனியர்கள் தான் இதனை உண்ணக்கூடிய பழம் என்று கண்டறிந்து உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். இன்று இந்தியா தான் உலகிலேயே தக்காளியை அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக இருக்கின்றது. தக்காளி பொதுவாக சிவப்பு நிறத்தில் இருந்தாலும் சில இடங்களில் இது ஊதா உள்ளிட்ட சில நிறங்களிலும் வளர்கிறது.


எலும்புகளுக்கு நல்லது:


தக்காளியில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் இருக்கிறது. அமெரிக்க விவசாயத் துறையின் கூற்றின்படி 100 கிராம் தக்காளியில் 110 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இதனால் உங்கள் எலும்புக்கு எப்போதும் வலிமை கிடைக்கும்.


ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்..


தக்காளியில் க்ரோமியம் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. சர்க்கரை நோயாளிகள் அன்றாடம் உணவில் தக்காளியை சேர்த்துக் கொள்வது நல்லது.


ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்


ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பது ஒரு இரசாயனக் கலவைகள். இவை உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்ற உதவும். இந்த மாசுக்கள் உடலில் இருந்தால், உடலில் நோய்கள் வந்து தங்கிவிடும். எனவே உடலைத் தூய்மைப் படுத்தி பாதுகாப்பதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளன. இவை ரத்தத்தில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸை வெளியேற்றுகிறது. சமைக்காத தக்காளி வைட்டமின் சி உறிஞ்சுதலை சிறப்பாகச் செய்கிறது.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..


தக்காளியில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை அதிகரிக்காமல் தடுக்கும். உடல் சக்தி நிறைந்ததாகவும், ஆரோக்கியமானதாகவும் இருப்பதை உறுதி செய்யும்.


சருமத்திற்கும், கேசத்திற்கும் சிறந்தது..


நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்துவரும் சூழலில் சருமமும் கேசமும் வெகு எளிதாக மாசடைந்து விடுகிறது. உங்கள் டயட்டில் தக்காளியை எப்போதும் சேர்த்துக் கொள்வது மாசுபாட்டை எதிர்த்துப் போராடும். தக்காளியில் உள்ள லைக்கோபீன் (lycopene) நல்லதொரு க்ளென்ஸராக இருக்கும். 


தாக்காளியில் இத்தனை நன்மைகள் இருந்தாலும் கூட அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கல் எச்சரிக்கின்றனர். குறிப்பாக சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் தாக்காளியை தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். தக்காளி அதிகமாகும் போது சிறுநீரகங்களில் கல் அடைப்பு ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.