10 மடங்கு அதிவேகத்துடன் பரவக் கூடிய ஒமிக்ரான்  XE வைரஸ், இந்தியாவின் மும்பை மாநகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயில் சில அசாதாரண அறிகுறிகளும் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


மும்பையில் 50 வயதான பெண் ஆடை வடிவமைப்பாளருக்கு ஒமிக்ரான் XE என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த வகை ஒமிக்ரான் வைரஸ் 10 மடங்கு அதிக வேகத்துடன் பரவக்கூடியது என்று தெரியவந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்மணி, தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிப்ரவரி மாதம் இந்தியா வந்துள்ளார். மார்ச் மாதம் அவருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. 


அண்மையில் சார்ஸ்- கோவ்- 2 வைரஸின் புதிய உருமாற்றம் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறும்போது, ''இங்கிலாந்தில் ஜனவரி 19ஆம் தேதி  XE உருமாற்ற ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதில் இருந்து இதுவரை 637 பேர் இந்த வகை உருமாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 





இந்த வகை உருமாற்றம், வழக்கமாக ஒமிக்ரான் வைரஸ் பரவும் வேகத்தில் இருந்து 10 சதவீதம் அதிகமாகப் பரவும் என்று ஆரம்பக்கட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தகவல் இதுவரை உறுதியாகவில்லை. 


சார்ஸ்- கோவ்-  2 வைரஸை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 3 வகையான உருமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதாவது  XF, XE மற்றும் XD ஆகிய உருமாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன. டெல்டா மற்றும் ஒமிக்ரான் பிஏ.1 ஆகியவற்றின் உருமாற்றம் XD மற்றும் XF ஆகியவை ஆகும். XE என்பது ஒமிக்ரான் பிஏ.1 மற்றும் ஒமிக்ரான் பிஏ.2 ஆகியவற்றின் உருமாற்றம் ஆகும்.  


ஒரே நேரத்தில் 2 அல்லது 3 உருமாற்றங்களால் ஒருவர் பாதிக்கப்படுவதால், இந்த வைரஸ் உருமாற்றம் நடக்கிறது. இதனால் மனித உடலில், மரபணுக்களில் மாறுபாடு ஏற்படுகிறது. ஏற்கெனவே பெருந்தொற்றுக் காலத்தில் இத்தகைய உருமாற்றங்கள் நடந்திருக்கின்றன'' என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.




அறிகுறிகள் என்னென்ன?


ஒமிக்ரான்  XE வைரஸ் சிலருக்கு மிதமான அறிகுறிகளை ஏற்படுத்தும். சிலருக்கு தீவிரமான அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம். 


தனி நபரின் தடுப்பூசி திறன், முந்தைய காலகட்டங்களில் ஏற்பட்ட தொற்றால் கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி, நோயின் தீவிரத் தன்மை, அறிகுறி ஆகிய காரணிகளைப் பொறுத்து தனிநபர்களுக்கு அறிகுறிகள் மாறும்.


காய்ச்சல்,


தொண்டை அரிப்பு,


இருமல்,


சளி,


தோல் எரிச்சல் மற்றும் நிறம் மாறுவது,


இரைப்பை குடல் பிரச்சினை


உள்ளிட்டவை பொதுவான அறிகுறிகளாக இருக்கலாம்.




தீவிர அறிகுறிகள்


இதய நோய்,


படபடப்பு,


மனதில் குழப்பம் ஆகியவையும் இதன் அறிகுறிகள் ஆகும்.


சில நோயாளிகளுக்கு தீவிரமான நரம்பியல் நோய்களும் ஏற்படலாம் என்று ஆரம்பக்கட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.