திருவாரூர் மாவட்டத்தில் 55,400 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்.

 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் கொரோனா கட்டுப்பாட்டு அறை மற்றும் கொரடாச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் 12 வயது முதல் 14 வயதுடைய சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது…கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு தமிழக முதல்வர் அவர்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், தமிழகம் முழுவதும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை தமிழக அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில், நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம்கள், நிலையான தடுப்பூசி முகாம்கள், மருத்துவமனைகள், மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் என பல்வேறு வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது.



கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்பொழுது குறைந்திருந்தாலும் நாம் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியினை பின்பற்றி, அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தொடர்ந்து பின்பற்றிட வேண்டும். நேற்றைய தினம் 12 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் 55,400 சிறார்கள் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் என கணக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அவர்களது பள்ளிகளிலேயே செலுத்த திட்டமிடப்பட்டு தடுப்பூசி முகாம்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 



12 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டுமின்றி கொரோனா தொற்றிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்து கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். குறிப்பாக, கொரோனா தடுப்பு வழிமுறைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல் உள்ளிட்டவைகள் தொடர்பாக மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். பள்ளி மாணவ, மாணவியர்கள் கல்வி கற்பதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். கல்வி ஒன்றே அனைத்து காலகட்டத்திலும் ஒருவருக்கு உறுதுணையாக இருக்கும் என்பதனை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஹேமசந்காந்தி, கொரடாச்சேரி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசந்தர், மாவட்ட பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினரும், திருவாரூர் நகர்மன்ற உறுப்பினருமான பிரகாஷ், மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார்,  உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.