கொரோனாவால் உயிரிழப்பவர்களை விட அதனால் ஏற்படும் இணை நோய்கள் மூலமாகவே பலர் உயிரிழக்கின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று அதிகரிப்பு
இந்தியாவில் கடந்த நான்கு நாட்களில் குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு நேற்று மீண்டும் அதிகரித்து பதினேழாயிரத்தை கடந்தது. இந்த நிலையில், நாட்டில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 3) 24 மணிநேரத்தில் மட்டும் 19,893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து இந்தியாவில் திடீரென மீண்டும் கொரோனா தொற்று உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இறப்பு எண்ணிக்கை
கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற எண்ணிக்கையும் அச்சுறுத்துகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த போதிலும், பாதிக்கப்படும் மக்களிடையே லேசான அறிகுறிகளே அதிகளவில் காணப்படுகின்றன என நிபுணர்கள் இன்று தகவல் அளித்துள்ளனர்.
நிகில் மோடி
இது குறித்து டெல்லி அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர் நிகில் மோடி பேசுகையில், "நிச்சயம் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன, என்பது மறுக்கமுடியாதது. டெல்லியில் மட்டும் நேற்று 2 ஆயிரத்திற்கும் கூடுதலான பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. ஆனால், இவற்றில் பலருக்கு லேசான அறிகுறிகளே காணப்படுகின்றன. 80 முதல் 90 வயது வரையிலான நோயாளிகள் பலர் நீரிழிவு உள்ளிட்ட பிற பாதிப்புகளுடன் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கும் கூட லேசான கொரோனா அறிகுறிகளே உள்ளன", எனக் கூறியுள்ளார்.
திரேன் குப்தா
டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த மருத்துவரான திரேன் குப்தா சரியான நேரத்தில் பரிசோதனை செய்து கொள்ளாதவர்கள், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் தீவிர பிரச்சனையில் சிக்குகின்றனர் என கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு இன்னும் முழுதாக முடிந்து விடவில்லை எனக் கூறிய அவர், 3 மாதங்களுக்கு முன் தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு கூட மறுபடியும் பாதிப்பு ஏற்படுகிறது என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதில் எல்லோருமே கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை, சிலர் பன்றி காய்ச்சலால் பாதிகபட்டும் சிகிச்சைக்கு வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இணை நோய்கள்
மேலும் பேசிய அவர், "மக்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது, முக கவசங்களை அணியாமல் பொது இடங்களில் நடமாடுவது ஆகிய காரணங்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. பருவகாலத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களும் கூட இதற்கு ஒரு காரணம். இதன் மூலம் ஒரு சில மரணங்களும் ஏற்படுகின்றன. அவர்களில் பலர் கொரோனா தொற்றால் இறப்பதை விட, அதன் மூலம் ஏற்படும் இணை நோய்களாலேயே உயிரிழக்கின்றனர்", என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்