தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 5 ஆயிரத்து 415 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,70,963 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 5,415 ஆக உள்ளது.


இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 60 ஆயிரத்து 747 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 443 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 314 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 350 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 314 ஆக உள்ளது. கோவை 671, ஈரோடு 574, சேலம் 369, திருப்பூர் 337, தஞ்சாவூர் 260, செங்கல்பட்டு 254, நாமக்கல் 214, திருச்சி 198, திருவள்ளூர் 134, கடலூர் 127, திருவண்ணாமலை 151, கிருஷ்ணகிரி 122, நீலகிரி 128, கள்ளக்குறிச்சி 140, மதுரை 92,  ராணிப்பேட்டை 88, கன்னியாகுமரி 93, நாகை 78, தருமபுரி 112, விழுப்புரம் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.




கொரோனாவால் மேலும் 148 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,199 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 100 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 48 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8152 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 17 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 30 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 44,924 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 7,661 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 23,83,624 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.


12 வயதிற்குட்பட்ட 205 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது.


இன்று மாநிலம் முழுவதும் 38,251 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 26,559 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 5587 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


 






பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். 


“கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் செய்யப்பட்ட அளவுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1.30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா உச்சத்தில் இருந்த  காலத்தில் செய்யப்பட்ட அளவுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மேற்கு மண்டலத்தை சேர்ந்த 9 மாவட்ட மருத்துவர்கள் உடன் காணொலியில் ஆலோசிக்கப்பட்டது. மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு யோகா, மூச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.